ஏலத்திற்கு வரும் 'குசேலன்'!

வழக்கமான வெளியீட்டு முறைகளை மாற்றி முதன்முதலாக திரையரங்குகளில் நேரடியாக படத்தை விற்பனை செய்து, குறிப்பிட்ட நாட்களுக்குப் பிறகு படத்தை விநியோகஸ்தர்களுக்கு அவுட்ரைட் விற்பனை செய்யும் முறையை அறிமுகப்படுத்தியவர் ரஜினிதான்.
பின்னர் ஏல முறையில் விற்பனை செய்யும் போக்கைத் தொடங்கி வைத்த்தும் அவர்தான். இப்படி விற்பனை செய்யப்பட்ட ஓரே தமிழ்ப்படம் எனும் பெருமை சந்திரமுகிக்கு கிடைத்தது. படத்தை விற்பனை செய்த சிவாஜி பிலிம்ஸ் நல்ல லாபம் பார்த்தது.
ரஜினியின் அடுத்த படமான சிவாஜியை வழக்கமான முறையிலேயே விற்று பெரும் சாதனை படைத்தது ஏவி.எம். நிறுவனம். (ஆனால், படத்துக்கு ஓவர் ஹைப் உருவாக்கப்பட்டதால் மிகப் பெரிய விலை கொடுத்த சில வினியோகஸ்தர்கள் கதி தான் அம்பேல் ஆனது)
இப்போது 'குசேலன்' முறை... இந்தப்படம் ஆகஸ்டு மாதம் திரைக்கு வர உள்ளது. ஆனால் இப்போதே வினியோகஸ்தர்கள் படம் உனக்கு எனக்கு என நெருக்க ஆரம்பித்துவிட்டனர்.
இதனால் சந்திரமுகியைப் போலவே, இப்படத்தையும் ஏல அடிப்படையில் விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளன இப்படத்தின் தமிழ் - தெலுங்கு தயாரிப்பு நிறுவனங்களான செவன் ஆர்ட்ஸ், வைஜெயந்தி மூவிஸ் மற்றும் கவிதாலயா.
படத்தை மொத்தமாக ஏலத்தில் எடுத்துக் கொள்ள பிரமிட் சாய்மீரா நிறுவனம் முதலில் விருப்பம் தெரிவித்தது. ஆனால், இப்போது, ஐங்கரன் மற்றும் ஆட்லேப்ஸ் நிறுவனங்களும் களத்தில் குதித்துள்ளன.
இந்த இரு நிறுவனங்களுமே தற்போது தயாரிப்பில் உள்ள ரஜினியின் ரோபோ மற்றும் சுல்தான் தி-வாரியர் படங்களின் தயாரிப்பாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போட்டியைச் சமாளிக்க, சந்திரமுகி படத்துக்கு செய்யப்பட்டதைப் போல ஏல முறை விற்பனை நடத்திவிடலாம் என இயக்குநர் வாசு கூறிய யோசனையை உடனடியாக ஏற்றுக்கொண்ட தயாரிப்பாளர்கள், அதற்கான வேலைகளில் இறங்கியுள்ளனர்.
ஆனால் இந்த விஷயத்தில் படத்தின் நாயகன் சூப்பர்ஸ்டார் ரஜினி இன்னமும் ஒரு முடிவான பதிலைச் சொல்லவில்லை. அவர் ஏற்கெனவே குசேலன் படத்தை அதிக விலைக்கு விற்கக் கூடாது என வெளிப்படையாக கூறிவிட்டார்.
குறைவான முதலீட்டில், நிறைய லாபம் கிடைத்த படமாக குசேலன் இருக்க வேண்டும். வினியோகஸ்தர்கள் இம்முறை எந்த விதத்திலும் குறை சொல்லக்கூடாது என்பதில் உறுதியோடு இருக்கிறார் ரஜினி. (எல்லாம், 'சிவாஜி' கொடு்த்த பாடம் தான் காரணம்)
'இன்னும் சில படங்களில்தான் நான் நடிப்பேன். அவற்றில் எனக்கான லாபம் முக்கியமில்லை. என்னை நம்பி பெரும் பணத்தை முதலீடு செய்கிற தயாரிப்பாளர்கள் மற்றும் வினியோகஸ்தர்கள் நன்கு சம்பாதிக்க வேண்டும். தியேட்டர்காரர்களுக்கு பெரிய லாபம் கிடைக்க வேண்டும். அதற்கான வழிகயைப் பாருங்கள்' என சிவாஜி படத்துக்கு வினியோகஸ்தர்களுக்கு ஷீல்டு வழங்கும்போது ரஜினி கூறியது நினைவிருக்கலாம்.


Click it and Unblock the Notifications











