குசேலன் நஷ்டத்தைச் சரிகட்ட இலவசமாய் சரோஜா?

By Staff

Saroja movie still
நம்பத்தான் முடியவில்லை... ஆனாலும் வருகிற செய்திகளை சொல்லாமலும் இருக்க முடியவில்லை.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் குசேலன் படம் வெளியாகி வெறும் 25 தினங்களே ஆன நிலையில் அந்தப் படம் தோல்வி என்றும், நஷ்டம் என்றும் முழுமயாக முடிவு செய்துவிட்ட திரையரங்கு உரிமையாளர்களின் வேகம் ஒட்டுமொத்த திரையுலகையே திகைக்க வைத்திருக்கிறது.

ஒருபக்கம் குசேலனின் சென்னை நகர் வசூல் மட்டும் ரூ.4.43 கோடிகள் என புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. பிரமிட் சாய்மிரா நிறுவனத் தலைவர் சுவாமிநாதனோ, இதுவரை இந்தப்படம் தமிழகத்தில் மட்டும் ரூ.26 கோடி வசூலித்திருப்பதாகக் கூறுகிறார்.

எண்பது திரையரங்குகளின் (மொத்தம் 375 தியேட்டர்கள்) டிசிஆர் எனப்படும் கலெக்ஷன் ரிப்போர்ட், ஒரு வார வசூலாக ரூ.8 கோடி வரைக் காட்டுகிறது. ஆனாலும் நஷ்டம் எப்படி என்றுதான் பலரும் வியப்புடன் கேட்கிறார்கள்.

ஆனால் தியேட்டர்காரர்களோ, எம்ஜி தொகை அதிகமாகக் கொடுத்து விட்டோம். அதை ஈடுகட்டும் அளவுக்கு அடுத்தடுத்த வார வசூல் நிலவரம் இல்லை, என்கிறார்கள்.

இப்போது கொடுக்கப்பட்டுள்ள நஷ்டக் கணக்கைச் சரிபார்த்து உண்மையைக் கண்டறியக் கூட யாருக்கும் அவகாசம் அளிக்கவில்லை திரையரங்கு உரிமையாளர்கள்.

சரோஜா இலவசம்...

எனவே வேறு வழியில்லாமல், குசேலன் திரைப்படத்தால் தங்களுக்கு நஷ்டம் என்று புகார் கொடுத்துள்ள திரையரங்கு உரிமையாளர்கள் அனைவருக்கும், தான் விநியோக உரிமை பெற்றுள்ள சரோஜா திரைப்படத்தை இலவசமாகத் தருகிறதாம் பிரமிட் சாய்மிரா நிறுவனம்!!

டி.சிவாவின் அம்மா கிரியேஷன்ஸ் தயாரித்து வெங்கட் பிரபு இயக்கியுள்ள இப்படத்தின் மொத்த உரிமையையும் பிரமிட் சாய்மிரா நிறுவனம் சில தினங்களுக்கு முன் வாங்கியது. ஆகஸ்ட் 30-ம் இந்தப் படத்தை உலகெங்கும் ரிலீஸ் செய்வதாகத் திட்டம்.

இப்போது குசேலன் ஓடிக்கொண்டிருக்கும் அனைத்து திரையரங்குகளும் (எல்லாருமே நஷ்ட ஜோதியில் தங்களையும் சேர்த்துக் கொண்டார்கள்... அகப்பட்ட வரை லாபம்தானே..!) ஒரு பைசா கூட பெற்றுக் கொள்ளாமல் சரோஜாவைத் தருகிறார்கள் பிரமிட் சாய்மிரா.

ஆக, ஒரு பெரிய பட்ஜெட் படத்தையே இலவசமாகக் கொடுக்கும் அளவுக்கு பிரமிட் சாய்மிரா லாபம் பார்த்திருக்கிறது குசேலனில் என எடுத்துக் கொள்ளலாமா...

'லாபம் எவ்வளவு என்பது தெரியாது. ஆனால் சாய்மிராவுக்கு குசேலனால் நஷ்டமில்லை என்பதுதான் உண்மை. அதனால்தான் அவர்கள் இந்த அளவு இறங்கி வந்திருக்கிறார்கள். ஆனாலும் இது ஆரோக்கியப் போக்கல்ல... இனி, ஒரு படம் முதல் இரு வாரங்களுக்குள் லாபம் சம்பாதிக்காவிட்டால் தோல்விப் படம் என முத்திரை குத்தி விடுவார்களா தியேட்டர்காரர்கள்...

இந்தப் போக்குத் தொடர்ந்தால் சினிமா என்ற தொழில் இருக்காது. அந்தப் பெயரில் சூதாட்டம் நடக்கவே உதவும். இதே தியேட்டர்காரர்கள் ரஜினியின் அடுத்தடுத்த படங்களில் கோடிகளைக் குவித்தவர்கள்தானே... இன்னும் ஒரு மாதம் கூட பொறுத்திருக்க முடியாதா இவர்களால்..., என்கிறார் ஒரு பெரிய தயாரிப்பாளர் கோபத்துடன்.

இன்னொரு பக்கம் இப்படிப்பட்ட செய்கைகளால் ரஜினி போன்ற பெரிய நடிகர்கள் படம் பண்ணாமல் ஒதுங்கிப் போகும் சூழலும் உருவாகிவிடும். அது சினிமாவுக்குத்தானே இழப்பு என்கிறார் அவர்.

நியாயம்தானே!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X