நான் செத்துப் பொழைச்சவண்டா...! - மதுரை இசை நிகழ்ச்சியில் டிஎம்எஸ்

தமிழ் சினிமாவின் மறக்கமுடியாத குரலுக்கு சொந்தக்காரர் திரைப்பட பின்னணிப் பாடகர் டி.எம்.சௌந்தரராஜன். சமீபத்தில் உடல்நிலை கெட்டு, உயிருக்கு ஆபத்தான நிலையில் சென்னை ஆஸ்பத்திரியில் சிகிச்சைப் பெற்றார். உடல் நலம் தேறிய அவர் கச்சேரி நடத்துவதற்காக நேற்று முன்தினம் மதுரை வந்தார். டி.எம்.சௌந்தரராஜன் ரசிகர் மன்றம் சார்பில் ஏழை குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்காக காந்தி மியூசியத்தில் நேற்று மாலை இசை கச்சேரி நடத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் உற்சாகத்துடன் டி.எம்.சௌந்தரராஜன் கலந்து கொண்டார். நிகழ்ச்சி தொடங்கும் முன் அவர் பேசுகையில், "மீனாட்சி அம்மன் அருளாலும், முருகப்பெருமான் அருளாலும் மறுபடியும் பிறந்து வந்துள்ளேன். எமனுடன் போராடி மீண்டு வந்துள்ளேன். மறுபடியும், மறுபடியும் நிறைய பாடல்களை பாட வேண்டும். என் மூச்சு உள்ளவரை பாடிக்கொண்டே இருப்பேன். ஒவ்வொரு ஊரிலும், தெருக்களிலும் என் பாடல்கள் ஒலித்து கொண்டு இருக்கின்றன. புதிய நம்பிக்கையுடன் நிமிர்ந்து நிற்கிறேன்.
நான் 2 ஆயிரம் பக்தி பாடல்களைப் பாடியுள்ளேன். பகவான் இன்னும் என்னை பாட வைத்துள்ளான். சிகாகோ நகரில் செடி, கொடிகள் மூலம் என்னுடைய பாடல்களை ஆராய்ச்சி செய்துள்ளனர். அவையெல்லாம் மயங்கி ரசித்ததாக சொல்கிறார்கள். ரசிகர்களின் வாழ்த்துகளால் மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளேன்..." என்றார்.
பின்னர் அவர் பல பாடல்களை பாடினார். அவர் பாடிய ஒவ்வொரு பாடல்களையும் ரசிகர்கள் ரசித்து கேட்டு மகிழ்ந்தனர். தான் மறுபடியும் நலம் பெற்று வந்ததைக் குறிப்பிட்டு, "நான் செத்துப் பொழைச்சவண்டா..." என்ற எம்ஜிஆர் பாடலைப் பாடியபோது ரசிகர்கள் கரகோஷமெழுப்பினர்.
அதன்பின் டி.எம்.சௌந்தரராஜனின் மூத்த மகன் பாலராஜன் எம்.ஜி.ஆர். பாடல்களையும், இளைய மகன் செல்வக்குமார் சிவாஜி பாடல்களையும் பாடினார்கள்.


Click it and Unblock the Notifications











