சினிமா தொழிலாளர்களுக்கும் எட்டுமணி நேர வேலை-குகநாதன் கோரிக்கை

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன தலைவர் வி.சி.குகநாதன், சென்னையில் நேற்று மாலை நிருபர்களிடம் கூறியது:
"திரைப்பட தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, பொதுச்செயலாளர் ராகுல்காந்தி, மத்திய தொழிலாளர்கள் நல அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கே, மத்திய செய்தித்துறை அமைச்சர் அம்பிகா சோனி ஆகியோரிடம் மனு கொடுக்க இருக்கிறோம்.
திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தொழிலை மற்ற தொழில்களுக்கு உள்ளதைப்போல் தொழில் அங்கீகாரம் செய்ய வேண்டும். மற்ற தொழில்களில் உள்ளதைப்போல் 8 மணி நேர வேலை நிர்ணயம் செய்ய வேண்டும். பொருளாதார ஏற்றங்களுக்கு ஏற்றவாறு சம்பள விகிதாச்சாரம் ஏற்றப்பட வேண்டும்.
திரைப்பட தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வேண்டும். ஒரு படத்தின் தணிக்கை சான்றிதழ் பெறுவதற்கு முன்பு திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்திடம் இருந்து சம்பள பாக்கி இல்லை என்று சான்றிதழ் பெற வேண்டும் என்ற கோரிக்கைகள் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருக்கும்.
இந்த கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி கன்னியாகுமரியில் இருந்து டெல்லி வரை பேரணி நடத்தி, மனு கொடுக்க முடிவு செய்து இருக்கிறோம்.
இந்தியாவிலேயே முதன்முதலாக திரைப்பட தொழிலாளர்களால் பையனூரில் கட்டப்பட்டுள்ள படப்பிடிப்பு தளத்தை ஜனவரி 14-ந் தேதி முதல்-அமைச்சர் திறந்து வைக்க வருவதற்காக சம்மேளனம் பெருமைப்படுகிறது,'' என்றார்.


Click it and Unblock the Notifications











