''பாராட்டும் என்னை பாதிக்காது''
யார் பாராட்டினாலும் சரி, விமர்சித்தாலும் சரி, எதுவும் என்னைப் பாதிக்காது என்று கூறியுள்ளார் இசைஞானி இளையராஜா.
ஷங்கரின் சிஷ்யரான அனந்த நாராயணன் இயக்கி அறிமுகமாகும் படம் வால்மீகி. விகடன் டாக்கீஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.
இப்படத்தின் ஆடியோ ரிலீஸ் விழா சென்னையில் நடந்தது. இந்த விழாவில் இசைஞானி இளையராஜா, இயக்குநர் ஷங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இளையராஜாவும், ஷங்கரும் இணைந்து கலந்து கொண்ட விழா என்பதால் பெரும் எதிர்பார்ப்பு காணப்பட்டது.
நிகழ்ச்சியில் இளையராஜா பேசுகையில், நான் பொதுவாக எந்த விழாவுக்கும் போவதில்லை. அதற்கு ஒரே காரணம்தான். அதில் பேசுபவர்கள் என்னைப் பற்றி புகழ்ந்தும், மற்றவர்களை இறக்கி வைத்தும் பேசுவார்கள். அது எனக்குப் பிடிக்காது.
என்னை யார் பாராட்டினாலும் சரி, விமர்சித்தாலும் சரி அது என்னை எந்த வகையிலும் பாதிக்காது.
எனக்கு யாரும் தேவையில்லை. இசை பிறருக்கு வேலையாக இருக்கலாம். ஆனால் எனக்கு அப்படி இல்லை.
புதியவர்கள் நல்ல கதைகளுடன் வர வேண்டும். அப்படி வந்திருப்பவர்தான் அனந்த நாராயணன்.
எப்போதுமே, ஒரு படத்துக்கு இசையமைத்து முடித்துக் கொடுத்தவுடன், அந்தப் படத்துக்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இருக்காது. எப்போதுமே நான் தனியாகவே இருக்க விரும்புகிறேன் என்றார் இளையராஜா.
விழாவில் நாயகன் அகில், நாயகி மீரா நந்தன், தேவிகா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இசைஞானியின் இசைக்கு வாலி பாடல்களை புனைந்துள்ளார்.


Click it and Unblock the Notifications











