'100 நாள் விழா-பொய் போஸ்டர்களை நிறுத்துங்கள்!'

புதுமுகங்கள் ஜெய்வந்த்-ரம்யாபர்ணா நடித்துள்ள 'மத்திய சென்னை' என்ற படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னை கமலா தியேட்டரில் நேற்று நடந்தது. பாடல்களை, சென்னை நகர திரையரங்கு உரிமையாளர் சங்கத் தலைவர் அபிராமி ராமநாதன் வெளியிட்டார். தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராம நாராயணன், இயக்குநர் அமீர், கலைப்புலி சேகரன், சன் குழுமத்தின் ஹன்ஸ்ராஜ் சக்ஸேனா, இயக்குநர் பாரதிராஜா ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
விழாவில், வினியோகஸ்தர்கள் சங்க தலைவர் கலைப்புலி ஜி.சேகரன் பேசுகையில், "நேற்று சில இடங்களில் ஒரு படத்துக்கு 80 வது நாள் போஸ்டர் அடித்திருந்தார்கள். இந்தப் படம் ஒரு வாரம் கூட உண்மையில் ஓடவே இல்லை. இப்படி போஸ்டர் ஒட்டுவதால் என்ன பலன்? ஓடாத படத்துக்கு 50 வது நாள், 100 வது நாள் போஸ்டர் ஒட்டும் போக்கை அடியோடு நிறுத்த முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
அடுத்து படங்களை சின்ன பட்ஜெட்டில் எடுக்க வேண்டும். சமீபத்தில் வெளியான எந்தப் படமும் தயாரிப்பாளர்களுக்கு லாபம் தரவில்லை. ஓரு படம் சுமாராக ஓடியது. ஆனால் அதன் தயாரிப்புச் செலவு அதிகம் என்பதால் வந்த லாபம் கடலில் கரைத்த பெருங்காயமாகிவிட்டது. சின்ன பட்ஜெட்டில் படம் எடுக்க வேண்டும். அப்போதுதான் வெற்றி பெரிய அளவில் பேசப்படும்", என்றார்.
அடுத்து பேச வந்த இயக்குநர் அமீர் இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசினார். அவர் கூறுகையில், "கலைப்புலி சேகரன் கூறியது போல ஓடாத படத்துக்கு இப்படி போஸ்டர் அடித்துக் கொண்டாடும் போக்கை தயாரிப்பாளர் சங்கம் கட்டுப்படுத்த வேண்டும்.
அந்த காலத்தில் இருந்து இந்த காலம் வரை எப்போதுமே சின்ன பட்ஜெட் படங்கள்தான் மிகப்பெரிய வெற்றியை பெறுகின்றன. எம்.ஜி.ஆர்-சிவாஜி காலகட்டத்தில் இருந்து இதுதான் நடந்து வருகிறது.
பருத்தி வீரன், சுப்பிரமணியபுரம் ஆகிய படங்கள் வெற்றி பெற்றதும், அதேபோன்ற படங்கள் வரிசையாக தயாராகின்றன. ஆனால் அந்த படங்கள் ரிலீசாகி இரண்டு நாட்கள் கூட ஓடுவதில்லை. இதை புதுமுக இயக்குநர்களுக்கு அறிவுரையாக கூற கடமைப்பட்டு இருக்கிறேன்.
ராம், பருத்திவீரன் ஆகிய இரண்டு படங்களும் சின்ன பட்ஜெட் படங்கள்தான். அந்த படங்களை எடுத்து வைத்துக்கொண்டு விற்பதற்கு படாதபாடு பட்டேன். ஒரு வினியோகஸ்தரை அணுகியபோது, 'அடுத்து பெரிய படங்கள் வருகின்றன. இந்த மாதிரி சின்ன படங்களை எல்லாம் பார்க்க மாட்டார்கள்' என்று சொல்லி, அந்த படங்களை வாங்க மறுத்து விட்டார்.
இதுபோன்ற சம்பவங்களால்தான் பெரிய பட்ஜெட்டில் படம் எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. வினியோகஸ்தர்களின் முழு ஒத்துழைப்பு இருந்தால்தான் சின்ன பட்ஜெட்டில் படம் எடுக்க முடியும். நீங்கள் வாங்கத் தயார் என்று சொல்லுங்கள்... நாங்கள் சின்ன பட்ஜெட் படங்களைத் தருகிறோம்", என்றார்.
விழாவில், பங்கேற்ற இயக்குநர் பாரதிராஜா, இலங்கை பிரச்சினை காரணமாக மேடையில் பேசுவதில்லை என்ற முடிவில் உறுதியாக இருப்பதால், பேச விரும்பவில்லை என்றார் (கலைஞருக்காக மவுனம் கலைத்தேன் என்றது?)
படத்தின் தயாரிப்பாளர் ராஜேஷ் ஜே.சந்தன் வரவேற்றார். இயக்குநர்கள் விவேகானந்த்-வீரசிங்கம் ஆகிய இருவரும் நன்றி கூறினார்கள்.


Click it and Unblock the Notifications











