ஸ்ரீதேவிக்கு எதிரான வழக்குக்கு தடை: சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல்

இந்த மேல் முறையீட்டு மனுவை மும்பை ஜூஹுவைச் சேர்ந்த எம்.எஸ்.போட்டோ பிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரான மது குப்தா தாக்கல் செய்துள்ளார்.
இதுகுறித்து அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், நடிகை ஸ்ரீதேவி என்னிடம் வாங்கிய பணத்துக்காக, கடந்த ஆண்டு மார்ச் 2ம் தேதி, ரூ. 92.5 லட்சம், ரூ. 8.41 லட்சம், ரூ. 31.62 லட்சம் ஆகிய மூன்று காசோலைகளைக் கொடுத்தார்.
இந்த காசோலைகளை வங்கியில் போட்டபோது ஸ்ரீதேவியின் கணக்கில் போதிய பணம் இல்லை என்று கூறி திரும்பி வந்து விட்டன.
இதையடுத்து மும்பை நீதித்துறை நீதிமன்றத்தில் ஸ்ரீதேவி மீது வழக்கு தொடரப்பட்டது. அதில் ஸ்ரீதேவிக்கு மும்பை நீதிமன்றம் சம்மன் அனுப்பியது.
இந்த நிலையில், ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூரும், அவரது மாமனார் சுரீந்தர் கபூரும் போலீஸில் ஒரு புகார் கொடுத்தனர். அதில் காசோலைகள் திருத்தப்பட்டு, மோசடி செய்யப்பட்டிருப்பதாகவும், என் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதில் கோரியிருந்தனர்.
மேலும், நடிகை ஸ்ரீதேவி பாம்பே உயர்நீதிமன்றத்தை அணுகி, தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றும், தன் மீதான விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி மனு தாக்கல் செய்தார்.
இதை ஏற்று கீழ் நீதிமன்றத்தின் விசாரணைக்கு பாம்பே உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து விட்டது. எனவே இந்த வழக்கை நடத்த முடியவில்லை. போலீஸாரின் விசாரணையும் நின்று போய் விட்டது.
பாம்பே உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு மிகப் பெரிய தவறின் அடிப்படையில் பிறப்பிக்கப்பட்டதாகும். எனவே இந்த உத்தரவை நீக்க வேண்டும். ஸ்ரீதேவி மீதான கிரிமினல் நடவடிக்கையை தொடர உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளார்.
இந்த மனு அடுத்த வாரம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.


Click it and Unblock the Notifications











