தமிழர்களைக் கொல்லும் ராஜபக்சே நிம்மதியாக வாழ முடியாது - சத்யராஜ் ஆவேசம்

திரையுலக தமிழீழ ஆதரவு இயக்கம் என்ற புதிய குடையின் கீழ் தமிழ்த் திரையுலகினர் இன்று சென்னையில் பிரமாண்ட உண்ணாவிரதப் போராட்டத்தினை நடத்தினர்.
இதில் பாரதிராஜா, பாலுமகேந்திரா, புலமைப்பித்தன், நடிகர் சத்யராஜ், இயக்குநர்கள் சீமான், அமீர் உள்ளிட்ட பலர் திரண்டு வந்து கலந்து கொண்டனர்.
உண்ணாவிரதத்துடன் ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது. போராட்டம் நடந்த இடத்தைச் சுற்றிலும் இலங்கையில் தமிழர்கள் சந்தித்து வரும் அவலங்கள், பிணக் குவியல் உள்ளிட்டவற்றின் புகைப்படங்கள் வைக்கப்பட்டிருந்தன.
போராட்டத்தின் தொடக்கத்தில் ஈழத்தில் உயிர் நீத்தவர்களுக்கு 2 நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. அப்போது இயக்குநர் சேரன் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு, ஈழத் தியாகிகளுக்கு வீர வணக்கம் என்று உரத்துக் குரல் எழுப்பினார்.
ராஜபக்சேவுக்கு எச்சரிக்கை..
நிகழ்ச்சியில் சத்யராஜ் மிகவும் ஆவேசமாக பேசினார்.
அவர் பேசுகையில், ஈழம் வெளிநாடு அல்ல, நம்நாடு. அங்கு போக ஆசைப்படுகிறேன். தமிழ் ஈழம் அமையுமானால் உலகின் முன் மாதிரி நாடாக அது இருக்கும்.
இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக கனடா, லண்டன் போன்ற வெளிநாடுகளில் எல்லாம் தமிழர்கள் போராட்டம் நடத்துகின்றனர். குழந்தைகளோடு பெண்கள் வீதிக்கு வந்து போராடுகிறார்கள்.
இத்தனைக்கும் இந்த போராட்டங்களை வழி நடத்துவது 20 வயது கொண்ட இளைஞர்கள்தான். அவர்களுக்கு பழைய வரலாறை சொல்லிக்கொடுக்க அவசியம் இல்லை.
விடுதலைப் போராட்டம் இலங்கையில் ஓயாது. தொடர்ந்து நடந்து கொண்டே தான் இருக்கும். அங்கு படுகொலை செய்யும் ராஜபக்சே இனி நிம்மதியாக வாழவே முடியாது என்றார்.
அகத்தில் கறுத்த சோனியா..
புலவர் புலமைப்பித்தன் மிகவும் வேதனையோடு பேசினார். அவர் கூறுகையில், ராஜீவ் காந்தி படுகொலை வருத்தமான விஷயம். எவருமே அதை ஏற்கவில்லை.
ஆனால் இதற்காக லட்சக்கணக்கான தமிழர்களின் உயிர் பறிக்கப்பட்டு விட்டது. இன்னும் எத்தனை உயிர் பலியாக வேண்டும் என்கிற கணக்கை அகத்தில் கறுத்தும் புறத்தில் வெளுத்தும் இருக்கும் சோனியா காந்தியே சொல்லி விடுங்கள் என்றார்.
புலிகளை நேசியுங்கள்..
மணிவண்ணன் பேசுகையில், அய்யா, புலிகளை நான் நேசிக்கிறேன். தொடர்ந்து நேசிப்பேன். காரணம் இந்தியாவின் தேசிய விலங்கு புலி. எனவே எல்லோரும் புலிக்கு ஆதரவு கொடுங்கள் என்றார்.
உண்ணாவிரதப் போராட்டம் முடிந்தவுடன் இன்று மாலை கூடி அடுத்தடுத்த போராட்டங்கள் என்ன என்பதை திரையுலகினர் முடிவு செய்யவுள்ளனர்.


Click it and Unblock the Notifications











