ஆஸ்கர்.. அமிதாப் விளாசல்!

'பச்சனாலியா' என்ற புத்தக வெளியிட்டு விழா நேற்று ஜெய்ப்பூரில் நடந்தது.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட அமிதாப், பின்னர் நிருபர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். விழாவுக்கு வந்திருந்த பார்வையாளர்களும் நிருபர்களாக மாறி அவரிடம் கேள்விகளை எழுப்பினர்.
பெரும்பாலான கேள்விகள், ஸ்லம்டாக் மில்லியனேர் குறித்து அவர் சமீபத்தில் தெரிவித்திருந்த கருத்துக்களைப் பற்றியதாகவே இருந்தன.
இந்தப் படம் 10 ஆஸ்கர் விருதுக்குத் தேர்வாகி இருப்பது குறித்துக் கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறிய பதில்:
இந்தியக் கலைஞர்கள் எதற்காக வெளிநாட்டு அங்கீகாரத்தை எதிர்பார்த்து நிற்கிறார்கள் என்பது எனக்குப் புரியவில்லை. இந்தியாவின் தேசிய விருதுதான் இந்தியப் படங்களுக்கு மிக மிக உயர்ந்த விருது.
நமது கலாச்சாரத்தை, மக்களைப் பற்றி நாம்தான் படமெடுக்க முடியும். இந்தக் கலாச்சாரம் பிடித்துப் போய், இதன் சிறப்பை வியந்து ஒரு வெளிநாட்டு விருது தரப்பட்டால் மகிழ்ச்சிதான். அதை வேண்டாம் எனமறும் சொல்லத் தேவையில்லை.
ஆனால் இப்போது நடப்பது மிகுந்த வருத்தமாக உள்ளது. ஆஸ்கர் விருதுக்காக பெரிய அளவில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்கள் இந்தியர்கள். காரணம் ஆஸ்கர் விருதுதான் தனது திறமையின் உச்சபட்ச அங்கீகாரம் என்ற நம்மவர்களின் மாயை.
ஆஸ்கர் விருதுகள் அவர்கள் நாட்டுப் படங்களுக்கானவை. அவர்கள் வீட்டுக்குள் நுழைய நாம் எதற்காகப் போட்டி போடுகிறோம்... புரியவில்லை.
குறிப்பிட்ட எந்தப் படத்துக்காகவும் இதை நான் சொல்லவில்லை. இந்தியக் கலைஞர்களின் பொதுவான மனநிலையைக் குறிப்பிடவே இதைச் சொன்னேன்.
யார் சொன்னாலும் சொல்லாவிட்டாலும், இந்திய சினிமாதான் பல காலமாக உலகில் முன்னிலை வகிக்கிறது; சிறப்பிடம் பெற்றுள்ளது.
அதே நேரம், இந்த ஆஸ்கார் விருது பரிந்துரைகளில் ரஹ்மான், குல்ஸார் ஆகியோருக்கும், கேமராவுக்கு பின்னால் உழைக்கும் ரெசுல் பூக்குட்டி போன்றோருக்கும் ஆஸ்க பரிந்துரைக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சிக்குரியது.
ஆஸ்கருக்கு ரெசுல் பரிந்துரைக்கப்பட்டது, தனிப்பட்ட முறையில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
இந்தியாவுக்கு பெருமைகள் பல சேர்த்துள்ள ரஹ்மானுக்கு கண்டிப்பாக ஆஸ்கர் கிடைக்கும். அந்த விஷயத்தில் எனக்கு மகிழ்ச்சிதான், அவருக்கு வாழ்த்துக்கள் என்றார்.


Click it and Unblock the Notifications











