ரஹ்மானுக்கு பாராட்டு விழா-இளையராஜா வாழ்த்துகிறார்

இதுகுறித்து திரை இசைக் கலைஞர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை:
திரை இசைக் கலைஞர்கள் சங்கம் மற்றும் டிரஸ்ட் சார்பில், சென்னை வடபழனியில் உள்ள சங்க ஆடிட்டோரியத்தில், ஸ்லம்டாக் மில்லியனர் படத்திற்காக இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்ற முதல் இந்திய இசைக் கலைஞரான இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானைப் பாராட்டி கெளரவப்படுத்தும் விழாவை வண்ணயமாக எடுக்கவிருக்கிறோம்.
மேலும் அவர் பெற்ற கோல்டன் குளோப் மற்றும் பாஃப்டா விருதுகளுக்காகவும் பாராட்டவிருக்கிறோம்.
இந்த நிகழ்ச்சியில், செவாலியர் டாக்டர் எம்.பாலமுரளி கிருஷ்ணா தலைமை விருந்தினராகவும், சிறப்பு விருந்தினர்களாக ஏவி.எம். சரவணன், கே.பாலச்சந்தர், எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா ஆகியோர் கலந்து கொண்டு, ஏ.ஆர்.ரஹ்மானைப் பாராட்டி பேசவிருக்கிறார்கள்.
இந்த மாபெரும் விழாவில், திரை இசைக் கலைஞர்கள் சங்கத்தைச் சேர்ந்த இசைக் கலைஞர்கள், இசையமைப்பாளர்கள், பிரபல பாடகர், பாடகியர், அனைவரும் கலந்து கொள்கின்றனர்.
மேலும் இந்தியாவின் புகழ் பெற்ற இசை வல்லுநர்களும், இசை நட்சத்திரங்களும் விழாவை அலங்கரிப்பார்கள்.
விழா ஏற்பாடுகளை தலைவர் கே.என்.ராமசுப்ரமணியன், பொதுச் செயலாளர் ஆபு கபிரியேல், டிரஸ்ட் சேர்ன் இசையமைப்பாளர் எஸ்.ஏ. ராஜ்குமார், டிரஸ்ட் செயலாளர் கல்யாண், பொருளாளர் பி.ஜி. வெங்கடேஷ் ஆகியோர் முன்னிருந்து செய்து வருகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியை சன் டிவி பிரத்யேகமாக ஒளிபரப்பவுள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமான நிலையத்தில் வரவேற்பு:
இதற்கிடையே ரஹ்மான் வரும் 28ம் தேதி சென்னை திரும்புகிறார். சென்னை விமான நிலையத்தில் திரையுலகமே திரண்டு அவருக்கு பிரம்மாண்டமான முறையில் வரவேற்பு அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே ரஹ்மானுக்கு வாழ்த்துக்கள் குவிந்து கொண்டே இருக்கின்றன.
வைகோ வாழ்த்து...
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள செய்தியில்,
இசை உலகில் ஈடில்லாப் பேரரசனாய் இமாலய புகழ் பெற்றார் ஏ.ஆர். ரஹ்மான். அகிலம் போற்றும் இசை மேதை மொசார்ட் மீண்டும் சென்னையிலே பிறந்து விட்டார் என்று அனைத்து நாட்டு இசையன்பர்களின் விழிகளும், செவிகளும் தமிழகத்தின் பக்கம் திரும்பச் செய்துள்ள ஏ.ஆர்.ரஹ்மான் ஆஸ்கார் விருது பெற்ற முதல் இந்தியர் எனும் போது, அந்த விண்முட்டும் புகழை ஈட்டியவர் நம் தமிழரல்லவோ என்று தமிழர் மனமெல்லாம் தித்திக்கிறது. ஆனந்த கும்மாளமிடுகிறது.
இசைக்கலையை உலகுக்கு முதலாவது தந்தவன் தமிழன். அத் தமிழ்குலத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் தன் இசைக்கலையால் உலகத்தை வென்று விட்டார். வாழ்க அவர் பல்லாண்டு! வாழ்க அவரது சாதனைகள் என்று கூறியுள்ளார்.
விஜயகாந்த்...
தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள செய்தியில்,
ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆஸ்கார் விருது வழங்கப்பட்டுள்ளது. அவரை ஈன்ற தமிழ்நாட்டில் பிறந்த மகனின் புகழைக்கண்டு பெற்ற தாய் எந்த அளவுக்கு உள்ளம் மகிழ்வாரோ, அந்த அளவுக்கு உலகெங்கும் உள்ள தமிழர்கள் பட்டாசுகள் வெடித்து, இனிப்புகள் வழங்கி விழாவாகக் கொண்டாடுகின்றனர்.
விருது பெற்றவுடன் "எல்லாப்புகழும் இறைவனுக்கே'' என்று அங்கே தமிழ் ஒலித்தது. அவர் தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல தமிழுக்கும் பெருமையை தேடி தந்துள்ளார். அவர் என்ன பேசினார் என்பதை உலகே ஆவலாக கேட்க அவர் தமிழில் பேசினார்.
உலகில் எந்த மூலையில் இருந்தாலும் தமிழர்கள் வாய்ப்பு கிடைத்தால் அவர்களுடைய திறமையை வெளிப்படுத்துவதன் மூலம் உச்சாணிக்கிளைக்கு செல்வார்கள் என்பதை ஏ.ஆர்.ரஹ்மான் நிரூபித்துள்ளார் என்று கூறியுள்ளார்.
கமல்ஹாசன்...
நடிகர் கமலஹாசன் கூறுகையில், ஒரு இந்தியனுக்கு முதன்முதலாக ஆஸ்கார் விருது கிடைத்திருப்பதற்காக, சந்தோஷப்படுகிறேன். இதுதான் உண்மையான அங்கீகாரம்.
நம் நாட்டில் படம் எடுத்து, அதை விருதுக்கு அனுப்பி, ஒரு விருந்தாளிக்கு விருது கொடுப்பது போல் நடப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஏ.ஆர்.ரஹ்மான் அமெரிக்க படத்தில் வேலை செய்து விருது பெற்றிருப்பதுதான் உண்மையான அங்கீகாரம். அதற்காக மகிழ்ச்சி அடைகிறேன்.
ஏ.ஆர்.ரஹ்மானுடன் இணைந்து பணிபுரிவது, ஒரு இனிமையான அனுபவம். அவர் ரொம்ப மென்மையாக நடந்து கொள்வார். பழகுவதற்கு இனியவர். இந்த நிமிடத்தில் இருந்தாவது நம் படங்களில் ஒரு மாற்றத்தை கொண்டு வர வேண்டும். அரைத்த மாவையே அரைக்காமல், புதுமையை கொண்டு வர வேண்டும் என்றார்.
கவிஞர் வைரமுத்து..
கவியரசு வைரமுத்து கூறுகையில்,
ஆஸ்கார் விருது என்பது உலக கலையுலகத்தின் கனவு. அந்த கனவு ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இருமுறை பலித்திருக்கிறது. இரட்டிப்பு மகிழ்ச்சி அடைகிறேன்.
இந்தியாவுக்கு ஒரு தமிழன் ஈட்டித்தந்த பெருமை இது. இசை என்பது தொழில் அல்ல; தவம். அந்த தவத்தை செய்தவருக்கு வரம் கிட்டியிருக்கிறது.
இளமையிலேயே விருது பெறுவது பெரிது; அரிது. முதுமையில் பெறுகிற விருது இறந்த காலத்திற்குரியது. இளமையில் பெறுகிற விருது எதிர்காலத்திற்குரியது. ஏ.ஆர்.ரஹ்மான் எதிர்காலத்தை கட்டியெழுப்ப இந்த விருது பயன்படும்.
அவரை அறிமுகம் செய்த இயக்குனர் பாலசந்தர்-மணிரத்னம் இருவருக்கும் இந்த பெருமையில் பங்கிருக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மானின் அன்னையாருக்கும், குடும்பத்தாருக்கும் என் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று கூறியுள்ளார்.
அதே போல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் என்.வரதராஜன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன், பாஜக மாநிலத் தலைவர் இல.கணேசன், நடிகர் சரத்குமார், பாஜக எம்பி திருநாவுக்கரசர், இயக்குனர் கே.பாலசந்தர், நடிகர் பிரபு ஆகியோரும் வாழ்த்தியுள்ளனர்.
நடிகர் பார்த்திபன், ஜெய் ஹோ' என்று எழுதப்பட்ட கேக் கை, ஏ.ஆர்.ரஹ்மான் வீட்டுக்கு கொண்டு வந்து அதை வெட்டி ரசிகர்களுக்கு ஊட்டி மகிழ்ந்தார்.
ஏ.ஆர்.ரஹ்மானின் இசைப் பள்ளியில் படிக்கும் வெளிநாட்டு மாணவ-மாணவிகளும் பட்டாசு வெடித்து மகிழ்ந்தனர்.


Click it and Unblock the Notifications











