விஜய் டிவியில் 'இப்படிக்கு ரோஸ்'

தென்னிந்தியத் தொலைக்காட்சி வரலாற்றிலேயே முதல் முறையாக அரவாணி சமூகத்தைச் சேர்ந்த ரோஸ் என்பவர் நடத்தும் வித்தியாசமான டாக் ஷோதான் இப்படிக்கு ரோஸ்.
28ம் தேதி தொடங்கும் இந்த நிகழ்ச்சி வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகும்.
அமெரிக்காவில் முதுநிலைப் பட்டப்படிப்பை முடித்தவர் ரோஸ். இந்த நிகழ்ச்சியை அவர்தான் தொகுத்து வழங்குகிறார். சமூகத்தில் தீண்டத்தகாத விஷயங்களாக கருதப்படும் பொருட்கள் குறித்து இந்த நிகழ்ச்சியில் பேசப்படவுள்ளது.
பல்வேறு சமூகப் பிரச்சினைகளை இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்கள் விவாதிக்கவுள்ளனர், அலசவுள்ளனர்.
சமூகத்தின் பல்வேறு தரப்பினரும் சந்திக்கும் பிரச்சினைகள், அதற்கான தீர்வுகளைச் சொல்லும் நிகழ்ச்சியாக இது இருக்கும்.
பொது இடத்தில் பேச முடியாது, யாருடனும் பகிர்ந்து கொள்ள முடியாதவற்றையும் இந்த நிகழ்ச்சியில் ரோஸ் மூலம் பகிர்ந்து கொள்ளலாம்.
வெளிநாடுகளில் வீட்டு வேலைக்காக செல்லும் பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகள், கல்லூரிகளில் நடக்கும் செக்ஸ் அராஜகங்கள், மாடல் அழகிகளின் வாழ்க்கை, பிரபலங்களிடையே அதிகரிக்கும் விவாகரத்து போன்றவை குறித்தும், அதில் சம்பந்தப்பட்டவர்களே நேரில் கலந்து கொள்ளும் விவாதங்களும் இந்த நிழ்ச்சியில் இடம் பெறவுள்ளன.
இந்த விவாதங்களின்போது பல்துறைகளைச் சேர்ந்த நிபுணர்களும் இடம் பெற்று, தீர்வுகளுக்கு வழி காட்டுவார்கள்.
ஒரு மாடரேட்டராக செயல்படும் ரோஸ், பார்வையாளர்களுக்கும், அவர்களின் பிரச்சினைகளுக்கும், அதற்கு தீர்வு சொல்வோருக்கும் இடையே பாலமாக விளங்குவார்.


Click it and Unblock the Notifications











