கேரளா: கோலிவுட் நடிகையை கடத்திய ரவுடிகள்-பணம் கொடுத்து மீட்பு

ஜே.பி.மாதா பிலிம்ஸ் என்ற படநிறுவனம், குறுக்குப்புத்தி என்ற படத்தை தயாரிக்கிறது. இதில் ஸ்ரீதர் என்பவர் ஹீரோவாகவும், சோனியா மற்றும் சுஹானி ஆகியோர் நாயகிகளாகவும் நடிக்கின்றனர். அனைவரும் புதுமுகங்கள்.
இப்படத்தின் டூயட் பாடல் ஒன்றை திருச்சூர் அருகே உள்ள பொன்னானி கடற்கரைப் பகுதியில் படமாக்கினர். ஸ்ரீதரும், சோனியாவும் பங்கேற்று ஆடிப் பாடுவது போல காட்சி படமாக்கப்பட்டது. இதை அப்பகுதியைச் சேர்ந்த மீனவர்கள், பொதுமக்கள் கூடி நின்று வேடிக்கை பார்த்தனர்.
அந்த சமயத்தில் திடீரென ஒரு கும்பல் அங்கு வந்தது. ஆடிக் கொண்டிருந்த ஸ்ரீதரைப் பிடித்துத் தள்ளி விட்டு சோனியாவை அலேக் ஆக கத்திமுனையில் தூக்கிக் கொண்டு ஓடினர். பின்னர் அப்பகுதியில் உள்ள ஒரு பழைய கட்டடத்திற்குள் சிறை வைத்தனர்.
இந்த சம்பவத்தால் படக்குழு அதிர்ச்சி அடைந்தது. கடத்தியவர்கள் பெரும் ரவுடிகள் என உள்ளூர் மக்கள் கூறினர். இதையடுத்து ரவுடிக் கும்பலிடம் பக்குவமாக பேசி சோனியாவை மீட்க படக்குழுவினர் தீர்மானித்தனர்.
தயாரிப்பாளர் பாபு ஜோசப்பும், இயக்குநர் லிங்கனும், ரவுடிக் கும்பலிடம் சென்று பேசினர். அப்போது ரவுடிக் கும்பல் 10 ஆயிரம் கொடுங்கள் விட்டு விடுகிறோம் என்று கூறினர். அப்பாடா தப்பித்தோம் என்று பெருமூச்சு விட்ட தயாரிப்பாளரும், இயக்குநரும், அந்தத் தொகையை உடனடியாக ரவுடிகளிடம் கொடுத்தனர்.
இதையடுத்து சோனியா விடுவிக்கப்பட்டார். அவ்வளவுதான், படப்பிடிப்பை ரத்து செய்து விட்டு அத்தனை பேரும் சென்னையைப் பார்க்க ஓடி வந்து விட்டனர்.
என்ன நடந்தது என்று லிங்கன் கூறுகையில், பொன்னானி கடற்கரைப் பகுதியில் பயங்கர ரவுடிக் கும்பல் இருப்பது குறித்து எங்களுக்கு எதுவும் தெரியாது. ஏற்கனவே அங்கு படப்பிடிப்பு நடத்திய மலையாள படப்பிடிப்பு குழுவினரிடமும் ரவுடிகள் இதேபோல் கலாட்டா செய்து இருக்கிறார்கள்.
மம்முட்டி, மோகன்லால் போன்ற பெரிய நடிகர்களே அங்கு படப்பிடிப்பு நடத்த முடியாமல், திரும்பி போய் இருக்கிறார்கள்.
சோனியாவை அவர்கள் கத்திமுனையில் இழுத்து சென்றதும், அங்கிருந்த பொதுமக்கள் எங்களிடம் இந்த தகவலை தெரிவித்தார்கள். கொலை செய்யக் கூட அஞ்சாத மோசமான ரவுடிக் கும்பல் அது என்று உள்ளூர் மக்கள் கூறியதால் பீதியடைந்தோம். இதையடுத்து ரவுடிகள் கேட்ட பணத்தைக் கொடுத்து விட்டு சோனியாவை மீட்டோம் என்றார் லிங்கன்.


Click it and Unblock the Notifications