30 ஆண்டுகளுக்குப் பின்...

சூப்பர் ஸ்டார்கள் என்ற அடையாளம் இல்லாத நேரத்தில் ரஜினியும், கமலும் இணைந்து நடித்து 1978-ல் வெளியான அற்புதமான படங்களில் ஒன்று. ஒரு நடிகையாக ஸ்ரீபிரியாவுக்கு மிகப் பெரிய அங்கீகாரம் கிடைத்ததும் இந்தப் படத்தில்தான்.
அடையாறு பிலிம் இன்ஸ்ட்டியூட்டில் படித்து முடித்த கையோடு ருத்ரைய்யா தயாரித்து இயக்கிய இந்த கருப்பு வெள்ளைப் படம், சிறந்த பாடலுக்கான தேசிய விருது பெற்றது.
இளையராஜாவின் இசையில் கவியரசு கண்ணதாசனே வெகுவாக ரசித்துக் கேட்ட 'உறவுகள் தொடர்கதை...' எனும் அருமையான பாடல் இந்தப் படத்தில்தான் இடம் பெற்றிருந்தது. இதை எழுதியவர் கங்கை அமரன்.
அதே போல இதே படத்தில் கங்கை அமரன் எழுதி கமல் பாடிய இன்னொரு பாடலான பன்னீர் புஷ்பங்களே... பெரும் வரவேற்பைப் பெற்றது அன்றைக்கு.
இத்தனைக்கும் கவியரசர் இந்தப் படத்தில் 'வாழ்க்கை ஓடம் செல்ல...' எனும் பாடலை எழுதியிருந்தார். அதையே தூக்கி சாப்பிட்ட பாடலாக அமைந்தது உறவுகள் தொடர்கதை. அதே போல எழுத்தாளர் வண்ணநிலவனும் இப்படத்தில் குறிப்பிடத்தக்க பங்காற்றியிருந்தார்.
இந்தப் படத்துக்குப் பிறகு 'கிராமத்து அத்தியாயம்' எனும் படத்தை மட்டுமே இயக்கினார் ருத்ரைய்யா. அதன்பிறகு படங்கள் இயக்கும் ஆர்வமே இல்லை எனக் கூறிவந்த இவர், இன்றைய படங்கள் மற்றும் ஹீரோக்களைப் பின் தொடரும் இயக்குநர்களின் பரிதாப நிலை என பல்வேறு விஷயங்களில் கடுமையான கருத்துக்களைச் சொல்லி வந்தார்.
1998ல் எழுத்தாளர் ஜானகிராமனின் 'அம்மா வந்தாள்' நாவலைப் படமாக்கும் முயற்சியில் ஈடுபட்டார் ருத்ரைய்யா. ஆனால் அது கைகூடவில்லை.
இந் நிலையில் கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் கழித்து இப்போது மீண்டும் ஒரு படம் எடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்.
'வேட்டையாடு விளையாடு' படத்தில் வில்லனாக நடித்த டேனியல் பாலாஜியை கதாநாயகனாக வைத்து தனது புதுப் படத்தை ஆரம்பிக்கப் போகிறார் ருத்ரைய்யா. இளையராஜா மற்றும் கங்கை அமரன் கூட்டணியை மறுபடியும் புதுப்பிக்கும் உத்தேசத்தில் உள்ளாராம் ருத்ரைய்யா.
வாங்கய்யா... நல்ல சினிமா தாங்கய்யா...


Click it and Unblock the Notifications











