எதையும் சாதிக்கவில்லை-ஏ.ஆர்.ரஹ்மான்

சினிமா இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு, சென்னை ரோட்டரி சங்கம், வாழ்நாள் சாதனையாளர் விருது கொடுத்து கவுரவித்தது. இந்த நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரகுமானிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அவற்றுக்கு ஏ.ஆர்.ரகுமான் அளித்த பதில்களும்:
ஜோதா அக்பர்' படத்தின் இசைக்காக நீங்கள் ஆராய்ச்சி எதுவும் செய்தீர்களா?
ஆராய்ச்சி செய்தது உண்மைதான். பழைய படங்களின் சாயல் எதுவும் வந்துவிடக்கூடாது என்பதற்காக, பல ஆராய்ச்சிகளை செய்தேன். அந்த படத்தின் இசையில் ஒரு புதிய பாதையும், புதிய பயணமும் இருக்க வேண்டும் என்ற முடிவில் உறுதியாக இருந்தேன்.
தொடர்ந்து இனிமையான அதே நேரம் ஹிட் பாடல்களைக் கொடுக்கிறீர்களே, எப்படி?
என் மீது ரசிகர்களுக்கு உள்ள நம்பிக்கையும், தப்பான மெட்டு போட்டுவிடக் கூடாது என்ற என் பயமும்தான் காரணம்.
நீங்கள் கேட்டு ரசித்த இசை-பாடல்களை பற்றி சொல்ல முடியுமா?
எம்.எஸ்.விஸ்வநாதன், ராமமூர்த்தி, கே.வி.மகாதேவன் ஆகியோரின் இசையில், கண்ணதாசன் எழுதி, பி.சுசீலா பாடிய பாடல்கள், மறக்க முடியாதவை. 1960களில் மென்மையான இசையும், வரிகளும் இருந்தன. மெல்லிய காற்று மாதிரி இசையும், வரிகளும் கைகோர்த்த காலம் அது.
கர்நாடக இசையில், யாருடைய இசையை ரசிப்பீர்கள்?
இங்கே மண்டலின் சீனிவாசன். வடக்கே கிஷோர் ஹேமந்த் குமார்.
இசை துறையில் சிகரத்தை அடைந்துவிட்டதாக நினைக்கிறீர்களா?
சிகரம், குறிக்கோள் என்பதெல்லாம் மனிதனால் உருவாக்கப்படுபவை. அதுபோல் எந்த வரைமுறையும் வைக்கக் கூடாது என்பது என் கருத்து.
நீங்கள் சாதித்தது, சாதிக்க நினைப்பது எதை?
இன்னும் எதையும் சாதிக்கவில்லை. வருங்கால சந்ததிகளுக்காக, கே.எம்.ஸ்கூல்' என்ற இசை கல்லூரியை தொடங்கி இருக்கிறேன். இதன் மூலம் நிறைய சாதிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது என்றார் ரஹ்மான்.


Click it and Unblock the Notifications











