சென்னை வந்த ஜாக்கி-தசாவதாரம் பார்த்தார்!

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்க்கு சொந்தமான தனி விமானத்தில் ஜாக்கிசான் தனது 10 உதவியாளர்களுடன் சென்னை விமான நிலையத்துக்கு நேற்றிரவு வந்து சேர்ந்தனர். விமானநிலையத்தில் அவருக்கு தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் மாலை அணிவித்து சிறப்பு வரவேற்பை அளித்தார்.
தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் ஜாக்கி சான், அவரது குழுவினர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஜாக்கி சான் தங்கியுள்ள 5வது மாடி தளத்தில் பாதுகாப்பு நடவடிக்கையாக பிற விருந்தினர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகர சிறப்பு கமாண்டோ போலீஸ் பாதுகாப்புடன், ஆஸ்கர் ரவிச்சந்திரன் ஏற்பாடு செய்துள்ள தனியார் செக்யூரிட்டிகளும் காவலுக்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.
தமிழக முதல்வர் கருணாநிதி தலைமையில் இன்று மாலை நடக்கும் விழாவில் தசாவதார பட ஆடியோ கேசட்டுகளை ஜாக்கி சான் வெளியிடுகிறார். இந்த விழாவில் படத்தின் நாயகன் கமல்ஹாசன் மற்றும் பிரபல நடிகர்கள் அமிதாப் பச்சன், மம்முட்டி, விஜய் உள்ளிட்ட ஏராளமான விஐபிகள் கலந்து கொள்கின்றனர்.
விழாவின்போது தசாவதராம் படத்தின் எல்லா பாடல்கள் மற்றும் டிரைலர் ஒளிபரப்பப்படுகிறது. இந்த விழாவுக்கான செலவு மட்டும் ரூ.10 கோடி என்று கோலிவுட் வட்டாரங்கள் மூக்கில் விரல் வைக்கின்றன.
தமிழ் திரைப்பட வரலாற்றில் ஒரு நடிகர் 10 விதமான கேரக்டர்களில் நடித்து வெளியாகும் முதல் திரைப்படம் தசாவதாரம் என்பது குறிப்பிடத்தக்கது. ரூ.50 கோடி செலவில் ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரித்துள்ளார்.
இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்க அமிதாப்பச்சன், மம்முட்டியும் நேற்று சென்னை வந்துவிட்டனர்.
தசாவதாரம் பார்த்த ஜாக்கி சான்:
இந் நிலையில் இன்று காலை ஜாக்கிசான், அமிதாப்பச்சன், மம்முட்டி ஆகியோருக்கு சிறப்பு காட்சியாக இன்று திரையிட்டு காட்டப்பட்டது.
பின்னர் அமிதாப்பச்சன் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள கே.ஜே. மருத்துவமனைக்கு வந்து அங்கு இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்ட குழந்தைகளை சந்தித்து சிறிது நேரம் உரையாடினார்.


Click it and Unblock the Notifications











