நடிக்க மறுத்த நாயகிகள்!- கருணாஸ் பரபரப்பு

நந்தா படத்தில் காமெடியனாக அறிமுகி பின்னர் முன்னணி நகைச்சுவை நடிகராக மாறியவர் கருணாஸ்.
திண்டுக்கல் சாரதி படத்தின் மூலம் நாயகனாக உயர்ந்தார்.
இப்போது அம்பாசமுத்திரம் அம்பானி என்ற படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தில் அவருடன் ஜோடியாக நடிக்க எந்த கதாநாயகியும் முன்வரவில்லையாம். இதனால் மும்பையைச் சேர்ந்த நவ்னீத் கவுரை ஒப்பந்தம் செய்துள்ளனர்.
இதுகுறித்து கருணாஸ் கூறியதாவது:
ரஜினிகாந்தில் இருந்து சத்யராஜ், சரத்குமார் வரை பெரிய நடிகர்கள் எல்லாம் வில்லனாக இருந்துதான் கதாநாயகன் ஆகியிருக்கிறார்கள். வில்லன்கள் கதாநாயகன் ஆகும்போது, நகைச்சுவை நடிகர்கள்நாயகன் ஆகக்கூடாதா? என்ற கேள்வியின் விளைவாகத்தான் கதாநாயகனாக நடிக்கவே முடிவு செய்தேன்.
திண்டுக்கல் சாரதி படத்தை அதன்பிறகுதான் ஒப்புக் கொண்டேன். இந்தப் படத்தில் எனக்கு ஜோடியாக நடிக்க பல கதாநாயகிகள் மறுத்து விட்டார்கள். இறுதியாக, மலையாள நடிகை கார்த்திகா சம்மதித்தார்.
அடுத்ததாக இப்போது, 'அம்பாசமுத்திரம் அம்பானி' படத்தில் நாயகனாக நடிக்கிறேன். ஆனால் இந்தப்படத்தில் எனக்கு ஜோடியாக நடிக்க ஒரு நடிகையும் முன்வரவில்லை. அட... வீட்டில் சும்மா உட்கார்ந்திருக்கிற கதாநாயகிகளைக்கூட கேட்டுப்பார்த்தோம். நடிக்க மறுத்து விட்டார்கள்.
'அழகி' படத்தின் மூலம் பிரபலமான மோனிகாவை நடிக்க வைக்கலாம் என்று நான்தான் சொன்னேன். 'அவர், 'சிலந்தி' என்ற படத்தில் படு கவர்ச்சியாக நடித்துவிட்டார். டி.வி. நிகழ்ச்சிகளில் வேறு வருகிறார். எனவே வேண்டாம்' என்றார்கள் தயாரிப்பாளரும்,இயக்குநரும். இருந்தாலும் பரவாயில்லை என்று நான்தான் கூறி, அவரை ஒப்பந்தம் செய்ய அணுகினோம்.
ஆனால் அந்தப் பொண்ணு 'கருணாஸ் ஜோடியாக நடிக்க மாட்டேன்' என்று கூறிவிட்டார்.
அடுத்து 'முனியாண்டி விலாஸ்' பூர்ணா, 'எல்லாம் அவன் செயல்' பாமா, 'ராமன் தேடிய சீதை' ரம்யா நம்பீசன் ஆகியோரையும் நடிக்க கேட்டாம். மறுத்து விட்டார்கள். கடைசியாக, 'கற்றது தமிழ்' படத்தில் கதாநாயகியாக நடித்த அஞ்சலியிடம் கேட்டோம். அவருக்கு இப்போது படங்ககளும் இல்லை. ஆனால் அவரும் நடிக்க மறுத்து விட்டார்.
'கற்றது தமிழ்' படத்தை வாங்கி வினியோகம் செய்தவனே நான்தான். அதனால் இரண்டே கால் கோடி ரூபாய் எனக்கு நஷ்டம் ஏற்பட்டது. அந்தப் படத்தை நான் ரிலீஸ் செய்திருக்காவிட்டால், அஞ்சலி கதாநாயகியாகவே ஆகியிருக்க முடியாது. அதற்கான நன்றியைத்தான் அந்தப் பொண்ணு இப்படி காட்டிடுச்சி.
நான், எந்த நடிகையிடமும் மடியில் படுத்து கொஞ்ச வேண்டும் என்று ஆசைப்பட்டு அவர்களிடம் போய் தேதி கேட்கவில்லை. தனிப்பட்ட முறையில் என் ஒழுக்கம் என்னவென்று எல்லாருக்கும் தெரியும். ஒரு நடிகை கூட என்னை விரல் நீட்டி தப்பாக பேச முடியாது. அப்படி ஒழுக்கமாக இருக்கிறவனுக்கு கதாநாயகிகள் செய்கிற மரியாதையைப் பாருங்க...
இப்போது மும்பை நடிகையான நவ்னீத் கவுரை அம்பாசமுத்திரம் அம்பானிக்காக ஒப்பந்தம் செய்துள்ளோம்... இந்த லட்சணத்துல உள்ளூர் நடிகைக்க எப்படி சான்ஸ் கொடுக்கத் தோணும்...", என்றார் கருணாஸ்.


Click it and Unblock the Notifications











