மீண்டும் மு.க.முத்து

கருணாநிதியின் முதல் மகனான மு.க.முத்து, எம்.ஜி.ஆர். காலத்தில் ஹீரோவாக அறிமுகமானவர். அணையா விளக்கு, பிள்ளையோ பிள்ளை, போக்கிரி ஆகியவை அவர் ஹீரோவாக நடித்த படங்கள். எம்.ஜி.ஆருக்குப் போட்டியாக களம் இறக்கி விடப்பட்ட முத்து, அந்த முயற்சியில் தோல்வியடைந்தார்.
அதன் பின்னர் நடிப்பை கை விட்ட மு.க.முத்து குடிக்கு அடிமையானார். இதனால் கோபமான முதல்வர் கருணாநிதி அவரை விட்டு ஒதுங்கினார். ஆனாலும் வேண்டிய சமயங்களில் உதவிகளை செய்து கொண்டிருந்தார்.
ஆனால், முத்து பலமுறை உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந் நிலையில் முத்து மீது முதல்வர் மீண்டும் அன்பு காட்ட ஆரம்பித்தார். சமீபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வீடு திரும்பிய மு.க.முத்து தனது 60வது பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு முதல்வர் கருணாநிதி தனது குடும்பத்தினருடன் வந்து வாழ்த்துக்களை வழங்கினார்.
தற்போது உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் புத்துணர்வு பெற்றுள்ள மு.க.முத்து தனது கவனத்தை இசையின் பக்கம் திருப்பியுள்ளார். அவரது குரலும், எம்.ஜி.ஆர். குரலும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகவே இருக்கும். அந்தக் குரல் வளம் இன்னும் மாறாமல் அப்படியே உள்ளது.
இதையடுத்து அவர் திரைப்படங்களில் பாடத் தொடங்கியுள்ளார். இயக்குநர் பவித்ரன் இயக்கி வரும் மாட்டுத்தாவணி படத்தில் மு.க.முத்து ஒரு பாடல் பாடியுள்ளார். அதுவும் அதிரடியான பாட்டுக்கு முத்து குரல் கொடுத்துள்ளாராம்.
இந்தப் பாட்டின் ரெக்கார்டிங் நேற்று பிரசாத் ஸ்டுடியோவில் நடந்தது. தேவா இசையில் உருவாகியுள்ள அண்ணன்மாரே, தம்பிமாரே, அருமையுள்ள அய்யாமாரே என்று தொடங்கும் அந்தப் பாடலை முத்து நேற்றுப் பாடினார்.
பாடல் பதிவுக்குப் பின்னர் முத்து தனது அனுபவத்தை செய்தியாளர்களுடன் பகிர்ந்து கொண்டார். அவர் கூறுகையில், இது மிகவும் சந்தோஷமான நேரம். எனது குரல் வளம் அப்படியே இருக்கிறது என்றால், அதற்காக நான் எதையும் செய்யவில்லை என்பதுதான் உண்மை.
எனது மாமா சிதம்பரம் ஜெயராமன் (அவரது மகளைத்தான் முத்து மணந்துள்ளார்) ரத்த பாசம் போய் விடுமா என்ன. அதனால்தான் எனக்கும் நல்ல குரல் வளம் வாய்த்துள்ளது.
இந்தப் பாடல் பதிவுக்காக நான் சிறப்பான பயிற்சி எதையும் எடுத்துக் கொள்ளவில்லை.
எனது அத்தை சண்முகசுந்தராம்பாள் (முரசொலி மாறனின் தாயார் மற்றும் கருணாநிதியின் அக்காள்) ஆசிர்வாதத்தை மட்டும் வாங்கிக் கொண்டு நேராக பதிவுக்கு வந்து விட்டேன் என்றார்.
மறுபடியும் நடிப்பீர்களா என்ற கேள்விக்கு மு.க.முத்து கூறுகையில், நான் தயார்தான். பொருத்தமான வாய்ப்பு வந்தால் மறுபடியும் நடிக்க ரெடிதான். இயக்குநர் ராஜேஷ்வர் கூட தனது இந்திரவிழா படத்தில் நடிக்குமாறு என்னைக் கேட்டுக் கொண்டார் என்றார் முத்து.


Click it and Unblock the Notifications