வார்னருடன் இணையும் செளந்தர்யா!

இதுதொடர்பான ஒப்பந்தம் குறித்த அறிவிப்பை ஆக்கர் ஸ்டுடியோஸ் நிர்வாக இயக்குநர் செளந்தர்யாவும், வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்தின் இந்திய தலைமை நிர்வாகியுமான பிளைஸ் பெர்னாண்டஸும் வெளியிட்டனர்.
இதுகுறித்து பிளைஸ் கூறுகையில், செளந்தர்யா ரஜினிகாந்த் திறமையானவர், திரைப்பட உருவாக்கம் குறித்த நல்ல அறிவுடையவர், தென்னிந்தியத் திரையுலகின் நாடி அவருக்கு நன்கு தெரியும். அவருடன் பணியாற்றுவது மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் இருக்கிறது என்றார்.
செளந்தர்யா ரஜினிகாந்த் வெளியிட்ட அறிக்கையில், வார்னர் பிரதர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றவிருப்பது கெளரவமாக கருதுகிறோம். பொழுதுபோக்குத் துறையில் உலகளவில் முன்னணியில் இருக்கும் நிறுவனம் வார்னர் பிரதர்ஸ்.
உயர்ந்த தரத்துடன் கூடிய படைப்புகளை உருவாக்குவதே ஆக்கர் ஸ்டுடியோஸின் லட்சியம். தற்போது வார்னர் பிரதர்ஸுடன் இணைந்திருப்பதன் மூலம் திரைத் துறையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று கூறியுள்ளார்.
இந்த ஒப்பந்தம் 3 ஆண்டுகளுக்கானது. வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்திற்காக ஆக்கர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் படங்கள் தயாரிக்கும்.
ஏற்கனவே ரிலையன்ஸின் ஆட்லேப்ஸ் நிறுவனத்துன் இணைந்து சுல்தான் தி வாரியர் என்ற அனிமேஷன் படத்தை செளந்தர்யா ரஜினிகாந்த் தயாரித்து வருவது நினைவிருக்கலாம்.
தந்தை ரஜினியை வைத்து தற்போது சுல்தான் அனிமேஷன் படத்தைத் தயாரித்து வரும் செளந்தர்யா, விரைவிலேயே ரஜினியை வைத்து முழு நீளப் பொழுதுபோக்குப் படத்தை தயாரிக்கப் போகிறாராம். இப்படத்தை வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் உலகளவில் விநியோகிக்கும் என்று தெரிகிறது.


Click it and Unblock the Notifications











