ரசிகர்களே ராஜா...!
ரசிகர்கள் கடும் அதிருப்தியுடனும், கடுப்புடனும் தியேட்டர்களை விட்டு ஓடிக் கொண்டிருப்பதை அறிந்த இயக்குநர்கள் கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் ஜனநாதன் ஆகியோர் தத்தமது தீபாவளி ரிலீஸ் படங்களில் ஏகப்பட்ட காட்சிகளை வெட்டித் தூக்கி எறிந்து விட்டனராம்.
இந்த தீபாவளிக்கு மொத்தமே 3 படங்கள்தான் ரிலீஸாகின. ஜெகன்மோகினி, ஆதவன், பேராண்மை. இந்த மூன்று படங்களுமே ரசிகர்களிடம் பெரும் அதிருப்தியை சம்பாதித்திருப்பதாக திரையுலகிலேயே பேசிக் கொள்கிறார்கள்.
காரணம், கொஞ்சம் கூட லாஜிக்கே இல்லாத பல காட்சிகள் இந்தப் படங்களில் குறிப்பாக, ஆதவன் படத்தில் இருப்பதாகவும், நீளமாக இருப்பதாகவும் ரசிகர்கள் குறைபட்டுக் கொண்டனர். மேலும், டெக்னிக்கலாக இப்போது ரசிகர்கள் நன்கு விவரம் அறி்ந்தவர்களாக இருப்பதால் படத்தில் தெரியும் ஓட்டைகளைப் பார்த்து கிண்டலடிக்கவும் ஆரம்பித்து விட்டனர்.
இதை அறிந்த இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், தனது உதவியாளர்களை பல்வேறு ஊர்களுக்கும் அனுப்பி, ரசிகர்களின் அதிருப்தியை அறிந்து வரச் செய்தார்.
திரும்பி வந்த அவர்கள் ரசிகர்கள் பெரும் அதிருப்தியுடன் இருப்பதாக ரவிக்குமாரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து கிட்டத்தட்ட 19 நிமிடக் காட்சிகளை வெட்டித் தள்ளி விட்டாராம் கே.எஸ்.ரவிக்குமார். இப்போது நீளம் குறைக்கப்பட்டு படம் ஓடிக் கொண்டிருக்கிறது.
இதேபோல, பேராண்மை படம் ஓகே என்றாலும் கூட சில காட்சிகள் மிக நீளமாக இருப்பதாக தகவல்கள் வந்ததால் கிட்டத்தட்ட கால் மணி நேரக் காட்சியை வெட்டி விட்டு டிரிம் ஆக்கியுள்ளனராம்.


Click it and Unblock the Notifications











