கற்பழிப்பு வழக்கு: மன்சூர் அலிகான் அப்பீல் மனு தள்ளுபடி

கேப்டன் பிரபாகரன் படம் மூலம் நடிகராக அறிமுகமாகி பல்வேறு படங்களில் நடித்தவர் மன்சூர் அலிகான். ஆரம்பத்தில் இவர் குரூப் டான்ஸராக இருந்தார்.
இந் நிலையில் கடந்த 1996ம் ஆண்டு டிசம்பர் மாதம் மன்சூர் அலிகான் மீது அவரிடம் உதவியாளராக இருந்த பெண் கற்பழிப்பு புகாரை கூறினார். இதையடுத்து மன்சூர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் கீழ் நீதிமன்றம் மன்சூருக்கு ரூ. 3 லட்சம் அபராதமும், 7 ஆண்டு சிறைத் தண்டனையும் விதித்தது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்தார் மன்சூர்.
இதில், மன்சூர் அலிகான் மீதான கற்பழிப்பு புகார் ஆதாரத்துடன் நிரூபிக்கப்படவில்லை என்று கூறி அவர் விடுதலை செய்யப்பட்டார். இருப்பினும் பாதிக்கப்பட்டதாக கூறப்பட்ட பெண்ணுக்கு ரூ. 10.25 லட்சம் நஷ்ட ஈடு அளிக்க வேண்டும் என மன்சூருக்கு உத்தரவிடப்பட்டது.
இதை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்றார் மன்சூர் அலிகான். அதில் தனக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை ரத்து செய்ய வேண்டும் என்று அவர் கோரியிருந்தார்.
இந்த மனுவை நீதிபதிகள் அரிஜித் பசாயத், சதாசிவம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது. பின்னர் நீதிபதிகள் அளித்த தீர்ப்பில்,
நஷ்ட ஈட்டை அளிக்க மன்சூர் அலிகான் சம்மதித்ததைத் தொடர்ந்தே சென்னை உயர்நீதிமன்றம் அந்தத் தொகையை அளிக்க உத்தரவிட்டது. இந்த நிலையில் மன்சூர் அலிகான் அந்த உறுதிமொழியிலிருந்து பின் வாங்குவது தவறு. அதை அனுமதிக்க முடியாது என்று கூறி மனுவைத் தள்ளுபடி செய்து விட்டனர்.


Click it and Unblock the Notifications











