புதுப்படங்களுக்கு 100 டிக்கெட்டுகள் கூட விற்கவில்லை! - கலைப்புலி சேகரன்
இரண்டு நாட்களுக்கு முன் புதிதாக வெளியான மோதி விளையாடு, ஐந்தாம் படை மற்றும் மலையன் ஆகிய மூன்று படங்களுமே படுமோசமான தோல்வியைத் தழுவியுள்ளன.
இந்தப் படங்களுக்கு முதல் நாளில் 100 டிக்கெட்டுகள் கூட விற்பனையாகாத நிலைதான் இப்போதும். நாடோடிகள் தவிர சமீபத்தில் வந்த எந்தப் படமும் ஓடவில்லை, என்றார் கலைப்புலி ஜி சேகரன்.
விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவரான ஜி சேகரன், பாக்ஸ் ஆபீஸ் நிலவரத்தை அவ்வப்போது துல்லியமான தகவல்களுடன் வெளியிட்டு வருகிறார். திரைவிழாக்களில், பாக்ஸ் ஆபீஸ் வசூல் விவரங்களைச் சொல்லி, திட்டமிட்டு படத்தை வெளியிடுங்கள் என அடிக்கடி கூறுபவர் சேகரன்.
நேற்று சென்னையில் நடந்த 'நாய்க்குட்டி' படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட சேகரன், சமீபத்திய திரைப்படங்களின் வசூல் விபரங்கள் குறித்து இப்படிப் பேசினார்:
இன்றைக்கு திட்டமிட்டு படங்களை வெளியிடாமல் கும்பலோடு கும்பலாக வெளியிட்டு தயாரிப்பாளர்கள் நஷ்டத்தைச் சந்திக்கிறார்கள்.
நாடோடிகள் திரைப்படம் திட்டமிட்டு உருவாக்கப்பட்டு, சரியான நேரம் பார்த்து தனியாக வெளியானது. படத்துக்கு நல்ல ஓபனிங் கிடைத்தது, படம் சிறப்பாக வந்திருந்ததால் பெரும் வெற்றியும் கிடைத்தது.
ஆனால் மற்றவர்கள் அப்படி திட்டமிட்டு வெளியிடுவதில்லை.
இரு தினங்களுக்கு முன்பு கூட, ஐந்தாம் படை, மோதி விளையாடு மற்றும் மலையன் ஆகிய படங்கள் வெளியாகின. மூன்றும் ஒரே நேரத்தில் வெளியானதால் அவற்றுக்கு சரியான வரவேற்பில்லை. இன்று 100 டிக்கெட்டுகளைக் கூட விற்க முடியாமல் திண்டாடும் நிலை உள்ளது, என்றார்.


Click it and Unblock the Notifications











