கதறி அழுதார்கள்: அமீ்ர்

தனது பெர்லின் அனுபவங்களை சென்னையில் செய்தியாளர்களிடம் பகிர்ந்து கொண்டார் அமீர். அவர் கூறியதாவது:
பருத்தி வீரன் படத்தை பெர்லினாலே விழாவுக்கு அனுப்பக் காரணமாக இருந்ததே மணிரத்னம்தான். இந்த விஷயம் பெர்லின் விழாவுக்குப் போய்வந்த பிறகுதான் எனக்கே தெரியும். அவரது பெருந்தன்மைக்கு எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை.
ஜெர்மனி பட விழாவில் பருத்தி வீரனுக்குக் கிடைத்த வரவேற்பு மெய் சிலிர்க்க வைத்தது. நம்ம ஊரில் எப்படி இந்தப் படத்தைப் பார்த்தார்களோ, கறி அழுதார்களோ அப்படித்தான் ஜெர்மன் மக்களும் ரசித்தார்கள்.
பார்வையாளர்களுக்கு மொத்தம் 4 காட்சிகள் திரையிடப்பட்டன. எல்லா காட்சிகளும் ஹவுஸ்புல். அதிக விலை கொடுத்து டிக்கெட் வாங்கித்தான் அனைவரும் இப்படத்தைப் பார்த்தார்கள். பல காட்சிகளில் அந்நாட்டு ரசிகர்கள் கதறி அழுததைப் பார்த்தேன். மொழி, கலாச்சாரம் மாறினாலும் மக்களின் உணர்வும் மனிதாபிமானமும் ஒன்றுதான் என்பதைப் புரிந்து கொண்டேன்.
இந்தப் படத்துக்கு ஆசிய படங்களுக்கான பிரிவில் சிறந்த இயக்குநருக்கான சிறப்பு விருது எனக்குக் கிடைத்தது. விழாவில் கலந்து கொள்ள வந்த படங்கள் 3,000. அதில் 174 படங்கள்தான் தேர்வாயின. இதில் 36 படங்களை மட்டும் போரம் (Forum) எனும் பிரிவுக்கு தேர்ந்தெடுத்தார்கள். அதில் ஒன்று பருத்தி வீரன்.
எனக்கு சினிமா மீது தீராத காதல் இருக்கிறது. நல்ல படங்கள் தரும் வெறி இருக்கிறது. ஏதோ என்னால்தான் அப்படி நல்ல படங்கள் தரமுடியும் என்ற இறுமாப்பு அல்ல அது. தமிழ் சினிமாவை உலக அரங்குக்குக் கொண்டு செல்லும் பலரது கனவை நனவாக்கும் பொறுப்பு அது.
நடிகர்கள் குறித்த எனது பார்வையிலும் நிறைய மாற்றங்களை ஏற்படுத்தக் காரணமாயிருந்தது இந்த பருத்தி வீரன்தான். குரு பக்தி, நன்றி போன்றவற்றை இனி எதிர்பார்ப்பதே அபத்தம்.
ரஜினி சார், கமல் போன்ற நடிகர்கள் ஏன் மாமனிதர்களாகவும் உலகம் போற்றும் கலைஞர்களாகவும் இருக்கிறார்கள் தெரியுமா? அவர்கள் தங்கள் குரு மீது கொண்ட பக்தியும், என்றும் மாறாத நன்றி விசுவாசமும்தான் அவர்களை இந்த நிலைக்கு உயர்த்தி இருக்கிறது.
நான் ரஜினி சாரை பலமுறை சந்தித்திருக்கிறேன். பாலச்சந்தரைப் பற்றிப் பேசும்போதெல்லாம் ஒருமுறை கூட அவர் பெயரை உச்சரித்தில்லை. குருஜி என்றே கூறுவார். கமல் சாரும் அப்படித்தான். பாலச்சந்தரிடம் தான் வாங்கிய திட்டுக்களைக் கூட அப்படியே ஒப்பிப்பார் அந்த ஒப்பற்ற கலைஞன் இன்றைக்கும்.
பருத்திவீரன் படம் எடுத்த வகையில் இன்னும்கூட எனக்கு ரூ.1 கோடி வரை அதன் தயாரிப்பாளர் தர வேண்டியுள்ளது. படம் பெர்லின் விழா வரை போனால் என்ன பட்ட கடன் தானாகவே தள்ளுபடியாகிவிடுமா? என்றார் அமீர்.


Click it and Unblock the Notifications











