கோவையில் மீண்டும் 'ரஜினி' பரபரப்பு!

விஜயகாந்த், சரத்குமார், கார்த்திக் என பலரும் அரசியலுக்கு வந்து விட்ட நிலையில் இவர்களுக்கு முன்பு அரசியலுக்கு வருவார் என பல காலமாக ரசிகர்கள் எதிர்பார்த்து வரும் ரஜினி இன்னும் அதுகுறித்து தீர்மானிக்கவேயில்லை. இதனால் அப்செட் ஆகியுள்ள ரஜினி ரசிகர்கள், தமிழகத்தில் ஆங்காங்கு போராட்டங்களை அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர்.
உச்சகட்டமாக கோவையில் ரசிகர்கள் தனிக் கட்சி தொடங்கி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். இதனால் கோபமடைந்த ரஜினி, அரசியலுக்கு வருவது எனது விருப்பம். யாரும் அதில் என்னை கட்டுப்படுத்த முடியாது என்று அறிக்கை விட்டார்.
மேலும் கட்சி தொடங்கியது குறித்து விளக்கம் அலிக்குமாறு கோவை ரசிகர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டது. ஆனால் தொடர்ந்து கட்சியை நடத்துவோம் ரசிகர்கள் தெரிவித்து விட்டனர்.
இதையடுத்து ரஜினிமன்ற நிர்வாகிகள் சிலர் மன்றத்திலிருந்து நீக்கப்பட்டனர். இந்த நிலையில், கோட்டைமேடு, பெரியகடை வீதி, பகுதியில் மீண்டும் ரஜினி ரசிகர்கள் டிஜிட்டல் போர்டு வைத்தனர்.
அதில், தேசியத்தில் திராவிட மக்கள் முன்னேற்றம் காண தலைவா இனியாவது சொல், இனிதான ஓர் சொல் என்று குறிப்பிடப்பட்டு ரஜினிக்காக தொடங்கப்பட்ட கட்சி கொடியும் இடம் பெற்றுள்ளது.
அதோடு அதில், தலைவா நீ அழைத்தால் கூடுவது மாநாடல்ல. தமிழ்நாடு என்று குறிப்பிட்டு அதில் கோட்டை நந்தகுமார், அன்புராஜா, ஜோதி முருகன், ஜாகீர் உசேன் என்று ரசிகர்கள் போட்டோவுடன் பெயர் அச்சிட்டுள்ளனர்.
ஆனால் வைக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே இந்த போர்டுகள் அகற்றப்பட்டு விட்டன. இந்த டிஜிட்டல் பேனர்களால் மீண்டும் கோவையில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











