ப்ரியாமணியை விமர்சிக்கவில்லை-சேரன்

சமீபத்தில் ஒரு பிரபல பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், தேசிய விருது கிடைத்த தலைக் கனத்தில் ப்ரியாமணி என்னைப் போன்ற இயக்குநர்களிடம் கதை கேட்கக் கூட முன்வருவதில்லை, என்று கூறியிருந்தார்.
உடனே இதற்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்த ப்ரியாமணி, சேரன் படத்தில் நடிப்பதுதான் விருதுக்கான தகுதி என்றால், அப்படி ஒரு தகுதியே எனக்குத் தேவலையில்லை என்று காட்டமாகக் கூறியிருந்தார்.
இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் சேரன் இப்போது பேட்டியளித்துள்ளார். அவர் கூறியதாவது:
ப்ரியாமணியின் தகுதிக்கு மீறிய கௌரவம் கிடைத்துவிட்டதாக நான் ஒரு போதும் கூறவில்லை. பருத்தி வீரன் பார்த்ததுமே, அவருக்குதான் தேசிய விருது கிடைக்கப் போகிறது என நினைத்தேன். ஒரு தமிழ்ப் படத்தில் நடித்ததன் மூலம் அவருக்கு விருது கிடைத்ததில் மகிழ்ச்சியே. அது அந்தப் படத்தின் இயக்குநருக்குக் கிடைத்த வெற்றி. தொடர்ந்து அதுபோன்ற இய்க்குநர்களின் படங்களில் நடிக்கும் போதுதான் நடிப்புக்கு புதிய பரிமாணம் கிடைக்கும்.
அதனால் என்னுடைய பொக்கிஷம் படத்தில் அவரை நாயகியாக நடிக்க வைக்க முடிவு செய்து அணுகினோம். நான் நேரடியாகப் பேசவில்லை. ஆனால் அவர் என்னுடைய உதவியாளர்களின் எந்த அழைப்புக்கும் பதிலே சொல்லவில்லை. ப்ரியாமணி போன்றவர்கள், தங்களுக்கு எந்த முக்கியத்துவமும் இல்லாவிட்டாலும், பெரிய நடிகர்களின படங்களில் நடிப்பதற்கே விரும்புகிறார்கள். நல்ல கதை, நடிக்க வாய்ப்புள்ள பாத்திரங்களைக் கொடுத்தாலும் என் போன்றவர்களின் படங்களில் நடிக்க மறுக்கிறார்கள் என்பதைத்தான் சொல்லயிருந்தேன். மற்றபடி அவரை விமர்சிக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை, என்றார்.
மேலும் கூறுகையில், நான் இப்போது எடுத்து வரும் பொக்கிஷம் திரைப்படம், ஆட்டோகிராப்பின் 2-ம் பாகமல்ல. இது வேறு கதை. ஆட்டோகிராப் இரண்டாம் பாகம் விரைவில் வெளிவரும். பொக்கிஷத்துக்கு அடுத்த படம் அதுதான்.
மாயக்கண்ணாடி தோல்வியால் நான் துவண்டுவிடவில்லை. என்னை மறுபடியும் புதிதாக்கிக் கொள்ள அந்தத் தோல்வி உதவியது என்பதே உண்மை.
வித்தியாசமான சிந்தனையோடு இன்றைக்கு புதிய இயக்குநர்கள் பாலாஜி சக்திவேல், சசிகுமார், வசந்தபாலன் போன்றோர் வருவது சந்தோஷமாக இருக்கிறது.
பிரமாண்டம்தான் உலகத் தரமா?
தமிழ்ப் படங்கள் பிரமாண்டமாய் தயாராவதாகவும், அதனால் அவை உலகத் தரத்துக்கு உயர்ந்திருப்பதாகவும் கூறுவதை என்னால் ஒப்புக் கொள்ள முடியவில்லை. வியாபாரம் வேண்டுமானால் உயர்ந்திருக்கலாம். ஆனால் அவற்றையெல்லாம் நல்ல தமிழ்ப் படங்கள் என்று சொல்ல முடியாது. அவை வெறும் பொழுதுபோக்குப் படங்கள்.
அவை, உலக அரங்கில் தமிழர்களின் வாழ்க்கையைச் சித்தரிக்காதவை. உலகத் தரத்துக்கான தமிழ் படத்துக்கு அவ்வளவு பிரமாண்டம் தேவையில்லை. எளிமையாக இருப்பதுதான் தமிழர்களின் வாழ்க்கை. அதே சமயம் வியாபார யுக்தியில் இவ்வளவு பெரிய வளர்ச்சியை தமிழ் சினிமா அடைந்ததும், அதில் ஜெயித்ததும் பாராட்டத்தக்கது, என்கிறார் சேரன்.
உங்களுக்கு ஏதாவது புரியுதா?


Click it and Unblock the Notifications











