சீமான் கூட்டத்தில் இந்து முன்னணி கலாட்டா!

தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில், கோவை அருகே உள்ள கவுண்டம்பாளையத்தில் பெரியார் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இயக்குநர் சீமான் கலந்துகொண்டு பேசினார். அப்போது பெரியாரின் கொள்கைகளை விளக்கி பேசினார்.
ஜாதி பிரிவுகள் இருக்க கூடாது என்றும், இந்து இதிகாசங்கள் குறித்தும் விமர்சித்து பேசியதாக தெரிகிறது.
அப்போது கூட்டத்தில் இருந்த இந்து முன்னணியைச் சேர்ந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதம் செய்தனர். இதைத் தொடர்ந்து அவர்களை அங்கிருந்தவர்கள் அப்புறப்படுத்தினார்கள். தொடர்ந்து சீமான் பேசிக்கொண்டு இருந்தார்.
சிறிது நேரத்தில் மேடையை நோக்கி வந்த சிலர் சோடா பாட்டில்களும், கற்களும் வீசப்பட்டன. இதனால் கூட்டத்தில் பதட்டம் ஏற்பட்டது. இதையடுத்து போலீஸார் சென்று சீமானை அங்கிருந்து பாதுகாப்புடன் வெளியேற்றினர்.
இந்த சம்பவத்தில் 4 பேருக்கு காயம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து கவுண்டம்பாளையம் பகுதியில் ஒரு பிரிவினர் வைத்து இருந்த பேனர்கள், மற்றும் சுவரொட்டிகள் கிழித்து எறியப்பட்டன.
இதையடுத்து இரு கோஷ்டியினரும் சரமாரியாக மோதலில் இறங்கினர். இதனால் போலீஸார் தடியடி நடத்தி அனைவரையும் கலைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக இந்து முன்னணியை சேர்ந்த 40 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்தச் சூழ்நிலையில் பாஜகவைச் ேசர்ந்தவர்கள் கவுண்டம்பாளையம் காவல் நிலையத்திற்கு சென்றனர். இந்து அமைப்புகள் மற்றும் கடவுள்கள் பற்றி பேசியவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.
இதையடுத்து இந்து கடவுள் பற்றி விமர்சித்து பேசியதாக சீமான் மற்றும் பெரியார் திராவிட கழக பொது செயலாளர் கு.ராமகிருஷ்ணன் உள்பட 25-க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதுகுறித்து சீமான் கூறுகயில், முற்போக்கு சிந்தனை கருத்துகளை கூறும்போது சிலர் தாக்குதல் நடத்துகிறார்கள். ஜாதி பிரிவுகளால் எழுந்துள்ள நிலைமையையும், பெரியாரின் கொள்கையை கடைபிடிப்பதால் மனிதசமூகத்துக்கு ஏற்படும் நன்மைகளையும் விளக்கினால் இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்படுகிறது. அதற்காக எனது கருத்துகளை தெரிவிக்காமல் இருக்கப் போவதில்லை என்றார்.


Click it and Unblock the Notifications











