எனக்கு எதிராக சதி-நயனதாரா

ஐபிஎல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிராண்ட் அம்பாசடர் பொறுப்பிலிருந்து நயனதாராவை நீக்கி விட்டனர். இதுகுறித்து அதிர்ச்சி தெரிவித்துள்ளார் நயனதாரா.
தனது நீக்கம் ஒருவரின் சதியால் வந்தது என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். கூட இருந்தே குழி பறித்து விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நயனதாரா கூறுகையில், என்னிடம் சூப்பர் கிங்ஸ் அணி சார்பில் எந்தவித ஒப்பந்தமும் போடவில்லை. எனக்கு நிறையப் படப்பிடிப்பு உள்ளது என்று முதலிலேயே கூறினேன். அதற்கு அவர்கள் பரவாயில்லை, சென்னையில் மொத்தம் 6 போட்டிகள் நடக்கின்றன. அதில் 3 போட்டிகளுக்கு மட்டும் வந்தால் போதும் என்றனர்.
இந்த நிலையில் திடீரென ஒரு நாள் பத்திரிக்கையாளர் சந்திப்பு வைத்துள்ளோம். வர வேண்டும் என்றனர். திடீரென சொன்னால் எப்படி, 2 நாள் முன்பே சொல்லியிருக்கலாமே என்று கேட்டதற்கு அவர்களிடமிருந்து பதில் இல்லை.
அணி அறிமுக விழாவில் நான் விஜய்யுடன் சேர்ந்து கலந்து கொண்டேன். முதல் போட்டிக்கு நான் வர அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு விட்டன. இந்த நிலையில் திடீரென உடல் நலம் சரியில்லாமல் போய் விட்டது. என்னிடம் அதற்கான டாக்டர் சான்றிதழும் இருக்கிறது.
இப்போது என்னை நீக்கியுள்ளதாக செய்தி வந்துள்ளது. இது அதிர்ச்சியாக உள்ளது. இன்னும் 5 போட்டிகள் உள்ளன. அதில் 3 போட்டிகளுக்கு அவர்கள் சொன்னது போலவே வந்திருப்பேனே.
எனக்கு எதிராக சதி நடந்துள்ளது. அதில் ஈடுபட்டது யார் என்று எனக்குத் தெரியும். இப்போது அதை சொல்ல விரும்பவில்லை. கூட இருந்தே குழி பறித்துள்ளனர். அந்த தந்திரம் எனக்குத் தெரியாது. ஆனால் நிச்சயம் நான் பதிலடி கொடுப்பேன் என்றார் நயனதாரா.
நயனதாரா நீக்கம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











