மாற்றுத் திறனாளிகளை கிண்டல் பண்ணாதீங்க! - சிங்கம்புலி உருக்கம்
மாயாண்டி குடும்பத்தார், கோரிப்பாளையம் படங்களைப் பார்த்தவர்கள் அதில் காமெடி கலந்த குணச்சித்திர வேடத்தில் வரும் ஒருவரைப் பார்த்து, 'யாருப்பா இந்த ஆளு... கலக்குறாரே' என்று தவறாமல் கேட்பார்கள்.
அவர்தான் சிங்கம் புலி.
மாயாண்டி குடும்பத்தார் படத்தில் சற்று மனநிலை பாதித்தவராக, அதே நேரம் உண்மையை பளிச்சென்று போட்டு உடைப்பவராக வருவாரே... அவர்தான் இந்த சிங்கம் புலி. இன்னும் விவரம் வேண்டுமானால், சூர்யாவின் மாயாவி, அஜீத்தின் ரெட் படங்களை இயக்கிய ராம் சத்யாதான் இப்போது சிங்கம் புலி என காமெடியனாகி கலக்குகிறார்.
பாலாவிடம் பயின்று, ஒரு இயக்குநராக வாழ்க்கையைத் துவங்கிய சிங்கம் புலி இன்று பெரிதும் விரும்பப்படும் நடிகராக மாறியிருப்பது குறித்து இப்படிக் கூறுகிறார்:
"நான் கடவுள் படம் மூலம் நடிகரானேன். மாயாண்டி குடும்பத்தார், கோரிப்பாளையம், படங்களில் காமெடி செய்தேன். எனது நடிப்பு சிறப்பாக இருப்பதாக பாராட்டுகள் குவிகின்றன. தொடர்ந்து நடிக்க முடிவு செய்துள்ளேன். தொடர்ந்து படங்களை இயக்கவும் செய்வேன்.
தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை, நான் எப்போதும் பிஸியான ஒரு கலைஞனாக இருப்பதையே விரும்புகிறேன்.
'சிங்கம்புலியா... அவர் நல்லா நடிப்பார்... படமும் இயக்குவார்' என்று இன்டஸ்ட்ரியில் உள்ளவர்கள் பேச வேண்டும்.
தேவைப்படும்போது நடிப்பு... மற்ற நேரங்களில் இயக்குநர். இப்படி இருப்பதையே நான் விரும்புகிறேன்..." என்றவரிடம், வடிவேலு, விவேக் குறித்து கேள்வி எழுப்பினர் நிருபர்கள்.
அதற்கு அவர் அளித்த பதில், நிச்சயம் கான்ட்ராவர்ஸியில்லை... சம்பந்தப்பட்டவர்கள் யோசிக்க வேண்டிய சமாச்சாரம்.
"சில படங்களில் மாற்றுத் திறனாளிகளை காமெடியர்கள் கேலி செய்து ரசிகர்களை சிரிக்க வைக்க முயற்சித்துள்ளனர். வடிவேல, விவேக் போன்றோர் இது மாதிரி கேலி செய்து காமெடி செய்யக்கூடாது, அப்படி நடிப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. நல்ல வேடங்கள் அமைந்தால் நடிப்பேன்.
தற்போது அவன் இவன், சந்திரபாபு, நான் மகான் அல்ல, தூங்காநகரம், மிளகா விருந்தாளி, ஞானி போன்ற பல படங்களில் நடித்து வருகிறன். காமெடி, குணச்சித்திரம் என வித்தியாசமான வேடங்கள். எல்லாமே சுவாரஸ்யமானவை, என்றார் சிங்கம்புலி.


Click it and Unblock the Notifications











