'ரசிகர்கள் தெளிவாக இருக்கிறார்கள்!'

'சிவகிரி' என்ற புதிய படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னை பிலிம்சேம்பர் தியேட்டரில் நடந்தது. பாடல்களை, தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன தலைவர் வி.சி.குகநாதன் வெளியிட, பிலிம்சேம்பர் செயலாளர் காட்ரகட்ட பிரசாத், வினியோகஸ்தர்கள் சங்க தலைவர் 'கலைப்புலி' ஜி.சேகரன் ஆகிய இருவரும் பெற்றுக்கொண்டார்கள்.
விழாவில், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம் கலந்துகொண்டு பேசினார். அவர் கூறியதாவது:
இந்த மூன்று மாதங்களாக வசூலே இல்லை திரையரங்குகளில். மாநிலம் முழுக்க 2500 திரையரங்குகள் இருந்தன. சென்னையில் மட்டும் நூறுக்கும் மேல் இருந்தன. அதெல்லாம் ஒரு காலம். இன்றோ, மாநிலம் முழுக்க 1200க்கும் குறைவாகவே தியேட்டர்கள் உள்ளன.
பார்க்கும் இடமெல்லாம் திருட்டு டிவிடி, விசிடி மயமாகிவிட்டது.
ஒரு புதுப்படம் வெளியே வருவதற்கு முன்பே அதன் தரம் ரசிகர்களுக்கு தெரிந்து விடுகிறது. ரசிகர்களும் மிக தெளிவாக இருக்கிறார்கள். இதனால் துவக்க வசூல் எனப்படும் ஓப்பனிங்கே பல படங்களுக்கு இல்லாமல் போய்விட்டது.
சமீபத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்ற ஒரு படத்தை தயாரித்த நிறுவனம், அடுத்ததாக ஒரு புதிய படத்தை தயாரித்து வெளியிட்டது. முதல் நாளில், அந்த படத்தை 40 பேர்தான் பார்த்தார்கள்.
இயக்குநர்கள் வெறும் டெக்னாலஜியை வைத்து ஒப்பேற்றிக் கொண்டு, செலவு வைத்துக் கொண்டிருக்காமல் நல்ல கதைகளை சுவாரஸ்யமாக சொல்ல வேண்டும், என்றார்.
விழாவில் ஃபெப்ஸி தலைவர் வி.சி.குகநாதன், பிலிம்சேம்பர் பொதுச் செயலாளர் காட்ரகட்ட பிரசாத், 'கலைப்புலி' ஜி.சேகரன், பட அதிபர்கள் 'மங்கை' அரிராஜன், விஜயமுரளி ஆகியோரும் பேசினார்கள்.
படத்தின் கதாநாயகன் சிவகிரி, பட அதிபர் மாயா ஆகிய இருவரும் வரவேற்று பேசினார்கள். இயக்குநர் ஷிவாஜி நன்றி கூறினார்.
படத்தின் மக்கள் தொடர்பாளரும், பிஆர்ஓ யூனியன் பொதுச் செயலாளருமான பெரு.துளசி பழனிவேல் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.
முன்னதாக ஐஸ்காம் ஆடியோ எனும் புதிய ஆடியோ நிறுவனம் துவக்கி வைக்கப்பட்டது.


Click it and Unblock the Notifications