வெக்கமா... அப்படீன்னா?- ஸ்வாதி

விரிந்த விழிகள், வெட்கம் சிந்தும் பார்வை, கவிதைச் சிரிப்பு என சுப்பிரமணியபுரத்தில் இளசுகளின் மனசை அள்ளியவர் 'கலர்ஸ்' ஸ்வாதி. தெலுங்கு மா டிவியில் தொகுப்பாளரான இவர், செல்வராகவனின் சூப்பர் ஹிட் தெலுங்குப் படமான ஆடவாரி மாட்டலாகு அர்த்தலே வேறுலே படத்தில் த்ரிஷாவின் தங்கையாக வந்து கலக்கினார்.
அந்தப் படத்துக்குப் பிறகு நிறைய வாய்ப்புகள் வந்தாலும், சுப்பிரமணியபுரம் வாய்ப்பு வந்ததும் அனைத்தையும் உதறிவிட்டு இந்த படத்திலேயே முழுமையாக கவனம் செலுத்தி வந்தார்.
அதற்கான பலன் இப்போது கைமேல் கிடைத்திருக்கிறது.
தமிழ் சினிமாவில் நன்கு நடிக்கத் தெரிந்த புதுமுகம் என்ற அங்கீகாரத்தை தனது முதல் படத்திலேயே பெற்றுவிட்டார் ஸ்வாதி. அடுத்த படத்தைத் தேர்ந்தெடுப்பதில் மிகுந்த கவனம் செலுத்தி வரும் ஸ்வாதியின் பேட்டி:
சுப்பிரமணியபுரம் படம் இவ்வளவு பெரிய வெற்றி பெறும் என எதிர்பார்த்தீர்களா?
இந்தப் படத்தை மிகவும் சின்ஸியராக எடுத்தார்கள். அந்த முயற்சிக்கு நிச்சயம் வெற்றி கிடைக்கும் என நம்பினேன். ஆனால் அது இவ்வளவு பிரம்மாண்டமாக இருக்கும் என நினைக்கவில்லை. மனதுக்கு நிறைவாக இருக்கிறது.
படத்தில் சாதுப் பெண்ணாக இருந்தீர்களே... நிஜத்தில் எப்படி?
அய்யோ... நான் நிஜத்தில் படு சுட்டி. ரகளைப் பேர்வழி. என்னை அந்தப் படத்தில் பார்த்துவிட்டு, ஏய்.. நீதானா அது? என்னமா கலாட்டா பண்ணுவ, இப்படி அடக்க ஒடுக்கமா நல்ல பொண்ணா எப்படி மாறினே... என எல்லாரும் கிண்டலடித்தார்கள். அந்த அளவு கலாட்டா பார்ட்டி நான்.
இந்தப் படத்தில் வெட்கப்படும் காட்சிகள் நிறையவே இருந்தன. உண்மையைச் சொல்லணும்னா, வெக்கப்படறதுன்னா என்னன்னே எனக்குத் தெரியாது.
இன்னொன்னு படம் முழுக்க முழுக்க கிராமத்தில் நடப்பது போல கதை அமைப்பு வேறு. எனக்கு கிராமமும் தெரியாது, வெக்கமும் தெரியாது (இவரல்லவா மாடர்ன் மங்கை!). இருந்தும் இயக்குநரும், யூனிட் ஆட்களும் எனக்கு மிகப் பெரிய உதவியாய் இருந்தார்கள். வெக்கப்படறது எப்படின்னு இயக்குநர் சசிகுமார்தான் சொல்லிக் கொடுத்தார். அவருக்குத்தான் தேங்க்ஸ் சொல்லணும்.
அடுத்து என்ன படம்?
தெரியல... நான் எதையுமே திட்டம் போட்டுச் செய்யறதில்ல. நிறைய வாய்ப்புகள் வருது. பார்க்கலாம்... எத்தனை படம் என்பது முகியமில்லை. ஒண்ணு ரெண்டு செஞ்சாலும் பிடிச்சமாதிரி செய்யணுமே. அவ்வளவுதான், என்கிறார்.
நல்ல பாலிஸி!


Click it and Unblock the Notifications











