மீராவை இழிவுபடுத்தி இ-மெயில்!

நடிகை மீரா வாசுதேவனுக்கும், பிரபல ஒளிப்பதிவாளர் அசோக்குமாரின் மகன் விஷாலுக்கும் திருமணம் நடந்தது. சமீபத்தில் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
மீரா தனது தாயாருடன், சாலிகிராமத்தில் உள்ள நடிகை சீதா வீட்டின் 2வது மாடியில் வசித்து வருகிறார்.
இந் நிலையில் மீராவை அசிங்கமாக சித்தரித்தும், அவரது நடத்தை குறித்து இழிவாக விமர்சித்தும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்களுக்கு இ-மெயில் வந்துள்ளது.
மீராவின் உறவினரான சுபத்ரா என்பவரின் பெயரில் இந்த மெயில் வந்துள்ளது. இதனால் மீரா பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், இது எனது பெயரைக் கெடுக்க வேண்டும் என்ற நோக்கில் அனுப்பப்பட்டுள்ளது. சுபத்ரா இதை அனுப்பியிருப்பார் என நான் நம்பவில்லை. விஷால்தான் இதற்குக் காரணமாக இருக்கக் கூடும் என நான் சந்தேகிக்கிறேன். இதுகுறித்து எனது வக்கீல் மூலமாக புகார் கொடுத்துள்ளேன்.
இதுதொடர்பான ஆதாரங்களை குடும்ப கோர்ட்டில் விவாகரத்து வழக்கு விசாரணைக்கு வரும்போது தெரிவிப்பேன் என்றார் மீரா.
ஆனால், மீராவின் புகாரை விஷால் மறுத்துள்ளார். இதில் எனக்கு எந்த சம்பந்தமும் கிடையாது. அதுகுறித்து எனக்கு எதுவும் தெரியாது என்றார் அவர்.
இதற்கிடையே, மீரா குடும்பச் சண்டையால் வீட்டை விட்டுக் காலி செய்யுமாறு சீதா கூறியதாக இன்னொரு செய்தி பரவியது. ஆனால் அதை சீதா மறுத்துள்ளார்.
எனது வீட்டின் 2வது மாடியில் மீரா குடியிருக்கிறார். அவரது தாயார் வயதானவர். அவரால் படிகளில் ஏறிச் செல்வதில் சிரமம் உள்ளது. இதனால்தான் கீழ் தளத்தில் குடியிருக்க ஏற்பாடு செய்வதாக அவர்களிடம் தெரிவித்துள்ளேன், அவ்வளவுதான் என்றார் சீதா.
இதற்கிடையே, கோர்ட்டுக்கு வெளியே மீரா வாசுதேவனும், அவரது கணவர் விஷாலும் மாறி மாறி புகார்கள் கூறி வருவதை குடும்ப நல நீதிமன்றம் கண்டித்துள்ளது.
விஷாலிடமிருந்து விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மீரா மனு தாக்கல் செய்துள்ளார். அதில் தனக்கு ரூ. 50 லட்சத்தை இழப்பீடாக தர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்த வழக்கு நீதிபதி தேவதாஸ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது மீரா வாசுதேவன் தனது வழக்கறிஞர் ரீட்டா சந்திரசேகரனுடன் கோர்ட்டுக்கு வந்தார். விஷால் தனது வழக்கறிஞர் தனசேகரனுடன் வந்தார்.
பின்னர் இருவரும் சமரச மையத்தில் ஆஜரானார்கள். அங்கு கிட்டத்தட்ட 2 மணி நேரம் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. முதலில் தனித் தனியாக உட்கார வைத்தும், பின்னர் இருவரையும் சேர்த்து அமர வைத்தும் பேச்சுவார்த்தை நடந்தது.
பின்னர் இருவரும் இணைந்து வாழ இன்னொரு வாய்ப்பு தருவதாக கூறி ஏப்ரல் 4ம் தேதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
மேலும், இருவருக்கும் உத்தரவு ஒன்றும் பிறப்பிக்கப்பட்டது. அதன்படி, வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், இரு தரப்பினரும் வெளியில் ஒருவர் மீது ஒருவர் புகார் கூறக் கூடாது என்று சமரச ஆலோசனை மையம் அறிவுரை கூறியது.
இதையடுத்து இருவரும் அவரவர் வழியில் வீடுகளுக்குப் புறப்பட்டுச் சென்றனர்.


Click it and Unblock the Notifications











