twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பி.ஆர்.பந்துலு நூற்றாண்டு விழா

    By Sudha
    |

    Veerapandiya Kattabomman
    திரைப்பட இயக்குநர் பி.ஆர். பந்துலுவின் நூற்றாண்டு விழா-கர்நாடகத்தில் ஓராண்டு கொண்டாட்டம்

    பழம்பெரும் திரைப்பட இயக்குநரான பி.ஆர்.பந்துலுவின் நூற்றாண்டையொட்டி கர்நாடகத்தில் ஒரு வருட கொண்டாட்டம் தொடங்கியுள்ளது.

    பூதகூர் ராமகிருஷ்ணய்யா பந்துலு என்ற பி.ஆர்.பந்துலு, 1910ம் ஆண்டு ஜூலை 26ம் தேதி பிறந்தார். தென்னிந்தியாவின் அனைத்து மொழிகளிலும் 57 படங்களை தயாரித்தும், இயக்கியுமுள்ளார். பத்மினி பிக்சர்ஸ் என்ற இவரது பிரபலமான பேனரின் கீழ் இந்தப் படங்கள் உருவாக்கப்பட்டன.

    இந்தியத் திரையுலகின் முன்னணி பிதாமகர்களில் பந்துலுவும் ஒருவர். அவரது பல படங்கள் தேசிய அளவிலும், மாநிலஅளவிலும் விருதுகளைக் குவித்துள்ளன.

    அவரது இயக்கத்தில் உருவான வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழ், கர்ணன் ஆகியவை காலத்தால் மறக்க முடியாதவை. இதில் வீரபாண்டிய கட்டபொம்மன் படத்துக்கு ஆப்ரோ ஆசிய திரைப்பட விழாவில் விருது கிடைத்தது.

    வீரபாண்டிய கட்டபொம்மன் படம் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் டெக்னி கலர் படமாகும். அதேபோல கன்னடத்தின் முதல் வண்ணப் படமான ஸ்ரீகிருஷ்ணதேவராயலு படத்தையும் பந்துலுவே தயாரித்து இயக்கினார்.

    என்.டி.ஆர்., நாகேஸ்வரராவ், எம்.ஜிஆர், சிவாஜி கணேன் ஆகிய தென்னகத்து சூப்பர் ஸ்டார்களுடன் நெருக்கமான நட்பு கொண்டிருந்தவர் பந்துலு.

    சிவாஜியும், அவரும் இணைந்து கொடுத்த வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன், கர்ணன், சபாஷ் மீனா, பலே பாண்டியா, முதல் தேதி, தங்க மலை ரகசியம் ஆகிய படங்கள் பெரும் வெற்றி பெற்றவையாகும்.

    கன்னடத்தில் பந்துலு இயக்கிய ஸ்கூல் மாஸ்டர் படத்திலும் சிவாஜி கணேசன் கெளரவ வேடத்தில் நடித்திருப்பார்.

    அதேபோல எம்.ஜி.ஆருடன் இணைந்து ஆயிரத்தில் ஒருவன், ரகசிய போலீஸ் 115, தேடி வந்த மாப்பிள்ளை, மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் ஆகிய படங்களைக் கொடுத்தவர் பந்துலு.

    ஜெயலலிதாவை முதன் முதலில் வெள்ளித்திரைக்கு அறிமுகப்படுத்தியவர் பந்துலு. கன்னடத்தில் இயக்கிய சின்னாட கோம்பே என்ற படம் மூலம் நடிகையானவர் ஜெயலலிதா. பின்னர் ஆயிரத்தில் ஒருவன் மூலம் ஜெயலலிதாவை எம்.ஜி.ஆருடன் ஜோடி சேர்த்து அறிமுகப்படுத்தினார்.

    தென்னகத்து சுதந்திரப் போராட்ட வரலாற்றை திரையில் அழகாகப் பதிவு செய்த ஒரே இயக்குநர் பந்துலு மட்டுமே. குறிப்பாக தமிழ்நாட்டு சுதந்திரப் போராட்ட மறவர்களை, பந்துலுவைப் போல சரியாக சித்தரித்தவர்கள் வேறு யாருமே கிடையாது. தமிழராக இல்லாத பந்துலு, தமிழ் சுதந்திரப் போராட்ட வரலாற்றை மிகச் சரியாகவும், சிறப்பாகவும் வெளிப்படுத்தியுள்ளார் என்பது வியப்புக்குரியது.

    1974ம் ஆண்டு அக்டோபர் 8ம் தேதி பந்துலு மரணமடைந்தார். அதன் பின்னர் அவர் இயக்கிய கப்பலோட்டிய தமிழன் படத்தைப் பார்த்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, நெகிழ்ந்து போய் இந்தப் படத்துக்கு நிரந்தர வரி விலக்க அளிக்க உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    பந்துலுவின் நூற்றாண்டையொட்டி அதை கர்நாடகத்தில் ஒரு வருட காலம் கொணடாடுகின்றனர். நேற்று தொடங்கியது இந்த கொண்டாட்டம். இதையொட்டி ஒவ்வொரு வாரமும் ஒரு மாவட்டத்தில் அவரது இரு படங்கள் திரையிடப்படுகிறது.

      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X