திமுகவுக்கு பா.விஜய் பிரச்சாரம்

ஊட்டியில் கவிஞர் பா. விஜய் கதாநாயகனாக நடிக்கும் ஞாபகங்கள் திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொண்ட கவிஞர் பா. விஜய் நிருபர்களிடம் கூறியதாவது:
பாக்கியராஜ் நடித்த ஞானப்பழம் என்ற படத்தின் மூலம் சினிமா பாடல் எழுத ஆரம்பித்தேன். இப்போது இரு படங்களில் நாயகனாக நடித்துக் கொண்டிருக்கிறேன். தற்போது நான் கதாநாயகனாக நடிக்கும் ஞாபகங்கள் படத்தில் ஒரு கிராமத்தில் கவிஞனாக உள்ள வாலிபன் சென்னைக்கு வந்து தனது வாழ்க்கையில் எப்படி முன்னேறுகிறான் என்பது பற்றி எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் கதாநாயகிக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
நான் அரசியலில் நுழைவது குறித்து இப்போது எதுவும் கூறுவதற்கில்லை. எனினும் முதல்வர் கருணாநிதி கட்டளையிட்டால் தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்துப் பிரசாரம் செய்ய முடிவெடுத்துள்ளேன்
நடிப்பதற்கு நான் வந்தாலும் தொடர்ந்து பாடல்கள் எழுதிக்கொண்டுதான் இருக்கிறேன். அதுதான் எனக்கு மிக முகத்கியம். தற்போது வள்ளுவனுடன் பேசுகிறேன் என்ற கவிதை தொகுப்பை எழுதி உள்ளேன். இதில் வள்ளுவரின் 80 குறள்களுக்கு புதுக்கவிதை மூலம் விளக்கம் அளித்துள்ளேன். ஞாபகங்கள் படம் மே மாதம் வெளியிடப்படும் போது இந்த கவிதை தொகுப்பும் வெளியிடப்படும்.
ஏ.ஆர். ரகுமானுக்கு ஆஸ்கார் விருது கிடைத்தது பற்றி நிறைய பேசிவிட்டேன். எழுதியும் உள்ளேன். என்னைப் பொறுத்தவரை தமிழனுக்குள் முளைத்த இசைக்கு உலகம் சூட்டிய மகுடம் ஆஸ்கார் என்று கூறுவேன்.
ஞாபகங்கள் படத்தில் 6 பாடல்கள் உள்ளன. இந்த 6 பாடல்களும் தமிழின் முதல் எழுத்தான அ-வில் தொடங்குவது போல் எழுதியுள்ளேன் என்றார் விஜய்.


Click it and Unblock the Notifications











