எச்ஐவி குழந்தைகளுக்காக இனி விளம்பரங்களில் நடிக்கப் போகிறேன்!-கமல்
சென்னை: இதுவரை நான் விளம்பரங்களில் நடித்ததில்லை. ஆனால் இனி நடிக்கப் போகிறேன். அந்தப் பணத்தை எய்ட்ஸ் பாதித்த குழந்தைகளுக்காக தரப் போகிறேன், என்றார் நடிகர் கமல்.
தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் சார்பில், ஊடக கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் கமல் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், "எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தகுந்த சரியான கல்வி, ஊட்டச் சத்தான உணவு மற்றும் மருத்துவ சிகிச்சைகள் கிடைக்கச் செய்வது நம் ஒவ்வொருவரின் கடமை.
இம்மாதிரி குழந்தைகளுக்கு பொது மக்கள் தரும் ஆதரவு அவர்களின் வாழ்வில் பெரும் மாற்றத்தினை உருவாக்கும். ஒவ்வொரு குழந்தைக்கும் கனவுகள் உண்டு. அவர்களின் கனவுகளை நினைவாக்க நாம் அவர்களுக்கு உதவ வேண்டும். எச்ஐவி பாதித்த குழந்தைகளுக்கும் வாழ அனைத்து உரிமைகளும் உள்ளன. அந்த உரிமைகளை பாதுகாப்பது நமது கடமை என்பதை மறந்துவிடக் கூடாது.
இதுவரை நான் விளம்பர படங்களில் நடித்ததில்லை. விளம்பர படங்களில் நடிக்க நிறைய வாய்ப்புகள் வந்ததும், அதை நான் பயன்படுத்தவில்லை. அந்த வாய்ப்புகளை நான் தவிர்த்து வந்தேன்.
இனி விளம்பர படங்களில் நடிக்க உள்ளேன். ஆனால் அதில் வரும் வருமானத்தை, நான் எனக்காக பயன்படுத்தப் போவதில்லை. அது என்னுடையது அல்ல. நம்முடையது. அந்தப் பணத்தை எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் வளர்ச்சிக்கு கொடுப்பதாக முடிவு செய்துள்ளேன்.
நான் தனி மனிதனாக கொடுக்கும் பணத்தைவிட, இரண்டு மடங்கு பணத்தை இந்த குழந்தைகளின் வளர்ச்சிக்கு அரசாங்கம் கொடுக்குமேயானால் அது நன்றாக இருக்கும். அரசாங்கத்துக்கு இது ஒரு வேண்டுகோள்தான். கோரிக்கை அல்ல," என்றார்.


Click it and Unblock the Notifications











