கஜினி வசூல் கணக்கு - உயர்நீதிமன்றத்தில் தாக்கல்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தமிழில் வெளியான கஜினி படத்தை தன் அனுமதியின்றி இந்தியில் தயாரித்திருப்பதாக, சேலம் சந்திரசேகரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இதனால் அந்தப் படத்தின் வசூலில் தனக்கும் பங்கு தர வேண்டும் என அவர் கோரியிருந்தார்.
இதையடுத்து அப்படத்தின் தியேட்டர் வசூல் கணக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய பட தயாரிப்பாளர் அல்லு அரவிந்துக்கு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அதன்படி அல்லு அரவிந்த் சார்பில் மூத்த வக்கீல் ஸ்ரீராம் பஞ்சு ஆஜராகி கஜினி பட வசூல் கணக்கை தாக்கல் செய்தார்.
படம் வெளியான டிசம்பர் 25-ம் தேதி முதல் ஜனவரி 15-ம் தேதி வரை இந்தியாவில் ரூ. 104 கோடியும் வெளிநாடுகளில் ரூ.7 கோடியும் வசூலானது என கணக்கை தாக்கல் செய்தார்.
தயாரிப்பாளர் சேலம் சந்திரசேகரன் சார்பில் ஆஜரான வக்கீல்கள் ராமானுஜம், சுந்தரேசன், சிவராஜ் ஆகியோர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். வருவாய்-செலவு விவரங்களை ஆவணமாக தாக்கல் செய்யவில்லை. வெறும் கணக்குகளை மட்டும் தாக்கல் செய்துள்ளனர்.
கஜினி படம் ரூ. 200 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது என பத்திரிகைகளில் தகவல் வெளியாகியுள்ளது, என்றனர்.
இதைக் கேட்ட நீதிபதிகள் முருகேசன், சத்திய நாராயணன், வசூல் கணக்கு தொடர்பான எதிர்ப்பு மனுவை பிப்ரவரி 5-ம் தேதி தாக்கல் செய்யலாம். அப்போது விசாரிக்கப்படும். ஜனவரி 15-ம் தேதி முதல் படம் வசூலித்த தொகையை பிப்ரவரி 17-ம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.


Click it and Unblock the Notifications











