படமாகும் குரோவர் கொலை!

பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் மகேஷ் பட் அடுத்து எடுக்கவுள்ள புதிய திரைப்படமும் சம்பிரதாயங்களை உடைத்து லட்சுமணர் கோட்டை தாண்டுவதாகவே அமைந்திருக்கும் என தெரிகிறது.
சினர்ஜி ஆட்லேப்ஸ் என்கிற தனியார் தொலைக்காட்சி தயாரிப்பு நிறுவனத்தின் அதிகாரியான நீரஜ் குரோவரை கன்னட நடிகை மரிய மோனிகா சூசைராஜும், அவரது காதலரான கொச்சி கடற்படை தள பொறியாளர் ஜெரோம் மாத்யூவும் திட்டமிட்டு படு கொலை செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
குரோவரைக் கொன்று அவரது உடலை துண்டு துண்டாக வெட்டியதா மரியா கூறியுள்ளார். இதற்கு 4 மணி நேரம் பிடித்ததாகவும் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
இந்த கொடூர சம்பவத்தை மையமாக வைத்து தனது அடுத்த படத்தை எடுக்கப் போவதாக பட் அறிவித்துள்ளார். படத்தின் கருவாக இந்த சம்பவம் இருக்குமே தவிர இதில் குரோவர், மரியா, மாத்யூ ஆகியோரை தவறாக சித்தரிக்கும் எண்ணம் இல்லை என்றும் பட் கூறியுள்ளார்.
ஒரு போலீஸ் அதிகாரியின் பார்வையில், சமூகத்தில் நிலவும் அவலங்கள், சம்பிரதாய மீறல்கள் ஆகியவற்றை இந்த படத்தின்மூலம் வெளிச்சம்போடுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
பட்டின் வெற்றிக் கூட்டாளியான ஷாகுஃப்தா ரபீக் தான் இந்த படத்துக்கும் திரைக்கதை எழுதுகிறார். மகேஷ் பட்டும், ரபீக்கும் மும்பை குற்றப்பிரிவு இணை கமிஷனர் ராகேஷ் மேத்தாவை சந்தித்து ஆலோசனை நடத்தினர். நீரஜ் குரோவர் கொலை வழக்கில் துப்புதுலக்கிய அதிகாரி இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கோண காதலால் விளைந்த இந்த கொடூர சம்பவத்தில் நன்கு படித்த மூன்று இளம்வயதினரின் வாழ்க்கை எப்படி பாழாகிறது என்பதுதான் படத்தின் நோக்கம். இதில் வேறு பப்ளிசிட்டி நோக்கம் இல்லை என்று வசனகர்த்தா ரபீக் கூறினார்.


Click it and Unblock the Notifications











