மல்லிகா கவர்ச்சிக்கு 'கட்'!

கமல்ஹாசன் 10 அவதாரங்களில் வரும் தசாவதாரம் படம் முழுமையாக முடிந்துள்ளது. கே.எஸ்.ரவிக்குமார் இயக்கியுள்ளார். கமல்ஹாசனுக்கு ஜோடியாக ஆசின், மல்லிகா ஷெராவத் மற்றும் ஹேமமாலினி, ஜெயப்பிரதா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். நெப்போலியனுக்கு படத்தில் முக்கிய வேடம்.
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த பிரமாண்டப் படத்தை சென்சார் சான்றிதழ் பெறுவதற்காக தணிக்ைகக்கு அனுப்பி வைத்தனர். படத்தைப் பார்த்த தணிக்கை வாரியம் சிறப்பாக வந்திருப்பதாக பாராட்டியதாம். அதேசமயம், மல்லிகா ஷெராவத் இடம்பெற்ற ஒரு பாடல் காட்சி தணிக்கை வாரிய உறுப்பினர்களை அதிர வைத்ததாம்.
காரணம், துணி என்ற பெயரில் துண்டு துக்கடா காஸ்ட்யூமில் படு கிளாமராக காட்சி அளித்துள்ளார் மல்லிகா. இதை இப்படியே விட்டால் நல்லா இருக்காதே, இந்தப் பாடலில் 9 இடங்களில் மல்லிகாவின் அசைவுகள் சற்று ஆபாசமாக உள்ளது. அவற்றை வெட்ட வேண்டும். அப்படிச் செய்தால் படத்திற்கு 'யு' சான்றிதழ் தரலாம் என்று கூறியுள்ளனர் தணிக்கை வாரிய உறுப்பினர்கள்.
படத்துக்கு 'யு' சான்றிதழ் பெற வேண்டும் என்பதில் படக்குழுவினர் உறுதியாக இருந்ததால், கட் செய்யச் சொன்னவற்றை கண்ணை மூடிக் கொண்டு தூக்கி விட்டனர். இருந்தாலும் கூட மல்லிகாவின் கவர்ச்சியில் பெரிய அளவில் குறைச்சல் இல்லை என்கிறார்கள்.
தற்போது படத்திற்கு யு சான்றிதழ் கிடைத்து விட்டது. இதையடுத்து படத்தை ஜூன் 6ம் தேதி திரைக்குக் கொண்டு வருவதில் தயாரிப்பாளர் தரப்பு மும்முரமாக உள்ளது.
தசாவதாரம் ரூ. 100 கோடி செலவில் தயாரிக்கப்பட்டுள்ளதாக ஆஸ்கர் ரவிச்சந்திரன் கூறியுள்ளார்.
தமிழ் தவிர, இந்தி, தெலுங்கிலும் படத்தை டப் செய்துள்ளனர். மூன்று மொழிகளிலும் ஒரே நேரத்தில் வெளியாகிறது. மேலும் உலகம் முழுவதும் ஒரே சமயத்தில் தசாவதாரத்தை திரைக்குக் கொண்டு வருகின்றனர்.
வழக்கில் நாளை தீர்ப்பு:
இதற்கிடையே, தசாவதாரம் படத்தில் வைணவர்களின் மனதைப் புண்படுத்தும் வகையில், பகவத் கீதை மீதும், ஓம் மந்திரம் மீதும் கமல்ஹாசன் கால் வைத்திருப்பதைப் போன்ற காட்சிகள் உள்ளன. எனவே இவற்றை நீக்கிய பிறகே படத்தை திரையிட அனுமதிக்க வேண்டும் என்று கோரி தொடரப்பட்டுள்ள வழக்கில் நாளை சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்கவுள்ளது.
சர்வதேச ஸ்ரீவைஷ்ணவ தர்ம சம்ரக்ஷனா என்ற அமைப்பின் தலைவர் ராமானுஜதாசர் என்பவர் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்த இந்திய தணிக்கை வாரியம், இவ்வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல. எனவே தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரியிருந்தது. அதேபோல இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்தரின் ஆகியோரும் பதில் மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.
இதேபோல கல்யாண சுப சமிதி என்ற அமைப்பின் தலைவர் சாந்தி சிதம்பரம் என்பவரும் புதிதாக வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தனது மனுவில், மிகவும் புனிதமான பெயரை தனது படத்திற்கு தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவச்சந்திரன் சூட்டியுள்ளார். ஆனால் மல்லிகா ஷெராவத் ஆபாசமாக நடனமாடும் காட்சியை இப்படத்தில் வைத்து இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தியுள்ளார்.
இப்படத்திற்கு வழங்கப்பட்ட தணிக்கைச் சான்றிதழை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்.
இப்படத்தால் வன்முறை, சமூக கொந்தளிப்பு, கலவரம் ஆகியவை ஏற்படக் கூடும். மேலும் இந்துக்களின் மனதையும் இது வெகுவாக புண்படுத்தும். எனவே இப்படத்திற்குத் தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் வெங்கட்ராமன், சத்தியநாராயணன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், இரு தரப்பு வாதங்களையும் கேட்டனர். பின்னர் வியாழக்கிழமை தீர்ப்பளிக்கப்படும் என அறிவித்தனர்.
மேலும் 2 பேர் கொண்ட குழு இப்படத்தைப் பார்த்து தங்களது கருத்தை நீதிபதிகளிடம் தெரிவித்துள்ளனர். அதையும் பரிசீலித்து நாளை தீர்ப்பு வழங்கப்படும்.
தசாவதாரத்திற்கு ஏற்பட்டுள்ள சிக்கல் தீருமா, திட்டமிட்டபடி படம் திரைக்கு வருமா என்பது நாளை தெரிய வரும்.


Click it and Unblock the Notifications











