மீண்டும் திரையில் ஜோ.!

நடிகர் சூர்யாவின் அகரம் பவுண்டேஷன் அமைப்பு காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒரு பள்ளிக்கூடத்தை தத்தெடுத்துள்ளது. இந்த நிலையில் பள்ளிக்குப் போக வேண்டிய வயதில், சிறார்கள் வேலை பார்த்தும், வீட்டில் விளையாடிக் கொண்டிருக்கும் அவல நிலையைப் போக்கும் வகையில் ஒரு விழிப்புணர்வுப் படத்தை தமிழக அரசுடன் இணைந்து அகரம் அமைப்பு தயாரிக்கிறது.
மேலும் ஆட்டிசம் குறித்தும் இதில் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்படுகிறது.
இந்தப் படத்தில் விஜய், சூர்யா, மாதவன் ஆகியோர் இணைந்து நடிக்கின்றனர். தற்போது ஜோதிகாவும் இதில் இணைந்துள்ளார். நானும் நடிக்கிறேன் என்று ஜோதிகாவே சூர்யாவிடம் கூறியுள்ளார். இதையடுத்து அவரையும் இப்பட்டியலில் இணைத்துக் கொண்டுள்ளனர். நான்கு பேரும் ஒரு பைசா கூட வாங்காமல் இப்படத்தில் நடிக்கின்றனர்.
இப்படத்தின் ஷூட்டிங் நேற்று சென்னை மெரீனா கடற்கரைப் பகுதியில் நடந்தது. இதில் பள்ளி சிறார்களோடு ஜோதிகா நடந்து வருவது போன்ற காட்சியைப் படமாக்கினர்.
புதிய பொலிவோடு காணப்பட்ட ஜோதிகாவை பெரும் திரளானோர் கூடி வேடிக்கை பார்த்தனர்.
கணவரின் அமைப்புக்காக எடுக்கப்படும் விழிப்புணர்வுப் படம் என்பதால் ஜோதிகா நடிப்பதாக கூறப்படுகிறது. அதேசமயம், முழு அளவில் அவர் நடிப்பாரா என்பது தெரியவில்லை.
இந்த டாக்குமென்டரிப் படத்தை அனைத்து தியேட்டர்கள், டிவிகள் உள்ளிட்டவற்றில் தமிழக அரசும், அகரம் பவுண்டேஷனும் இணைந்து வெளியிடும்.
ஆஜீத்தும்...
இதற்கிடையே, இந்தப் படத்தில் தற்போது அஜீத்தும் நடிக்கவுள்ளார். இத்தகவலை சூர்யா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சூர்யா கூறுகையில், படத்தில் சில காட்சிகளில் அஜீத்தும் தோன்றவுள்ளார். ஆனால் அவர் எப்போது நடிப்பார் என்று உறுதியாக தெரியவில்லை. ஏகன் படத்தில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். அதற்கு இடையே கிடைக்கும் கேப்பில் இப்படத்தில் நடித்துக் கொடுக்கவுள்ளார். அனேகமாக மே முதலாவது வாரத்தில் அவர் நடிக்கக் கூடும்.
ஏற்கனவே விஜய் தனது கால்ஷீட்டைக் கொடுத்து விட்டார். கிட்டத்தட்ட ஒட்டுமொத்த தமிழ்த் திரையும், தங்களால் முடிந்த அளவுக்கு இப்படம் உருவாக எனக்கு உதவி வருகிறார்கள். மணிரத்னம் சில டெக்னீஷியன்களையும், கேமராவையும் கொடுத்துள்ளார். ராஜீவ் மேனனும் உதவியுள்ளார். தனது யூனிட்டையே இப்படத்துக்காக கொடுத்துள்ளார்.
ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். கே.வி.ஆனந்த் கேமராவைக் கையாளுகிறார். தனது பிசியான பணிக்கு இடையிலும் இவர்கள் இப்படத்தில் ஒர்க் செய்கிறார்கள். பிரியா. வி. இயக்குகிறார்.
இதில் பங்கேற்றுள்ள அனைவருமே ஒரு பைசா கூட வாங்காமல் பணியாற்ற முன்வந்துள்ளனர். அனைவருக்கும் நான் நன்றிக் கடன் பட்டுள்ளேன் என்றார் சூர்யா.


Click it and Unblock the Notifications











