பிரகாஷ்ராஜ் ஒரு சிரஞ்சீவி கலைஞர் - கருணாநிதி

நடிகர் பிரகாஷ்ராஜ் தயாரித்துள்ள 'அபியும் நானும்' திரைப்படத்தின் ஆடியோ சி.டி. வெளியீட்டு விழா சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இதை முதல்வர் கருணாநிதி வெளியிட அவரது மகளும் எம்பியுமான கனிமொழி பெற்றுக் கொண்டார்.
விழாவில் வரவேற்புரையாற்றிய பிரகாஷ்ராஜ், தந்தைக்கும் மகளுக்கும் இடையே உள்ள பாசப்பிணைப்பை இந்த படம் சொல்வதால் முதல் வரையும், அவரது மகள் கனிமொழியையும் விழாவுக்கு அழைத்ததாக குறிப்பிட்டார்.
இதையடுத்து முதல்வர் கருணாநிதி பேசுகையில், நான் முன்பு முதல்வராக இருந்தபோது திரைப்பட விருது வழங்கும் விழாவில் தான் முதன்முறையாக நடிகர் பிரகாஷ்ராஜை சந்தித்தேன். அப்போது அவர் நடித்த 'இருவர்' படம் வெளிவந்த நேரம். அந்த படத்தில் அவர் என் வேடத்தில் நடித்திருந்தார்.
ஒருசிலர் அந்த படத்திற்கு ஆட்சேபனை தெரிவித்து அதனை வெளியிடக் கூடாது; தடை விதிக்க வேண்டும் என்று தெரிவித்தனர். ஆனால் ஒரு ஜனநாயக நாட்டில் அவரவர் கருத்துக்களை சட்டத்துக்கு உட்பட்டு முறையாக வெளிப்படுத்த உரிமை உண்டு என்பதால் அதனை நான் தடை செய்யவோ, நிறுத்தவோ மாட்டேன் என்று தெரிவித்தேன். மக்களுக்கு அந்தப் படம் பிடித்திருந்தால் சென்று பார்க்கட்டும் என்றும் கூறினேன்.
படமும் வெளிவந்து ஓரளவுக்கு வெற்றிகரமாக ஓடியது. பிரகாஷ்ராஜ் ஒரு சிறந்த கலைஞர். அவர் எழுதிய ஒரு புத்தகத்தை படித்தேன். அது சுவையாகவும், தத்துவ ரீதியாகவும் எழுதப்பட்டுள்ளது. அவர் சாதாரண கலைஞர் அல்ல; அவர் ஒரு சிரஞ்சீவி கலைஞர். அவரது ஆற்றலும் சிந்தனையும் மக்களுக்கு பயன்பட வேண்டும்.
இயக்குநர் ராதாமோகன் இயக்கிய 'மொழி' படத்தைப் போல இந்த 'அபியும் நானும்' படமும் மகத்தான வெற்றி பெறும்.
தந்தைக்கும், மகளுக்கும் இடையே உள்ள பாச உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் இந்த படத்தின் விழாவை தந்தையையும், மகளையும் அழைத்து நடத்திய பாங்கு பாராட்டுக்குரியது. இதனால் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன் என்றார்.


Click it and Unblock the Notifications











