ஆந்திர தர்ஹாவில் ஆஸ்கர் நாயகன் ரஹ்மான்!

இரட்டை ஆஸ்கர் விருதுகளுடன் வந்த ஏ.ஆர்.ரகுமானுக்கு நேற்று முன்தினம் சென்னையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பத்திரிகையாளர்களைச் சந்தித்து தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்ட ரஹ்மான், நேற்று ஆந்திர மாநிலம், கடப்பாவில் உள்ள அமீன் பீர் தர்காவுக்கு சென்றார்.
அங்கே சிறப்பு வழிபாடு நடத்தினார். தென் இந்தியாவின் அஜ்மீர் என்று அழைக்கப்படும் இந்த தர்ஹாவுக்கு, ஏ.ஆர்.ரகுமான் அடிக்கடி வந்து வழிபாடு நடத்துவது வழக்கம்.
ரஹ்மானுக்கு தர்ஹாவின் தலைமை காஜி ஹஸ்ரத் ஹரிஃபுல்லா ஹூஸைனி சாஹப் பிரமாண்டமான வரவேற்பு கொடுத்தார்.
அங்குள்ள மசூதியில் தொழுகையிலும் ஈடுபட்ட ரஹ்மான், பின்னர் நிருபர்களிடம் பேசுகையில்,
இந்த தர்ஹாவுக்கு வருவது எனக்கு மிகப்பிடித்தமான ஒன்று. உலகில் எங்கும் கிடைக்காத நிம்மதியும் சந்தோஷமும் இங்கு வந்து போன பிறகுதான் எனக்கு கிடைக்கிறது. எனது ஒவ்வொரு சாதனைக்குப் பின்னாலும் இந்த தர்ஹாவின் ஆசீர்வாதம் உள்ளது. நான் ஒவ்வொரு முறை இங்கே வந்து சென்ற பிறகுதான், பெரிய அளவில் சாதித்துள்ளேன் என்றார் ரஹ்மான்.
மதத்துக்கு அப்பாற்பட்ட பலரும் வந்து செல்லும் புனிதத் தலமாக விளங்குகிறது இந்த தர்ஹா. பாலிவுட் நட்சத்திர தம்பதிகளான அபிஷேக்பச்சன்-ஐஸ்வர்யா இருவரும் தங்களது திருமணம் முடிந்ததும் இந்த தர்ஹாவுக்கு வந்து வழிபாடு நடத்தியது குறிப்பிடத்தக்கது.
ஆஜ்மீரில் வீடு வாங்கிய ரஹ்மான்:
இதற்கிடையே உலகப் புகழ் பெற்ற காஜா மொய்னுதீன் சிஷ்தி தர்ஹா அமைந்துள்ள ஆஜ்மீரில் தனது தாயார் கரீமா பேகம் பெயரில் ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு வீடு வாங்கியுள்ளார்.
ஆஜ்மீர் தர்ஹாவுக்கு வருடம் இரண்டு முறையாவது வந்து விடுவார் ரஹ்மான் இன்று நேற்றல்ல, கடந்த இருபது வருடங்களாக ஆஜ்மீருக்கு வருவதை வழக்கமாக கொண்டுள்து ரஹ்மான் குடும்பம்.
இந் நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஆஜ்மீர் புறநகர்ப் பகுதியான குந்தன் நகரில் ஒரு பங்களாவை வாங்கியுள்ளார் ரஹ்மான். தனது தாயார் கரீமா பேகத்தின் பெயரில் இதை வாங்கியுள்ளார்ன்.
நவம்பர் மாத இறுதியில் பங்களாவைப் பதிவு செய்வதற்காக ரஹ்மான் தனது தாயார் மற்றும் சகோதரியுடன் இங்கு வந்து தங்கியுள்ளார். அப்போது அங்குள்ளவர்களுக்கு ரஹ்மான் மற்றும் குடும்பத்தினரை அடையாளம் தெரியவில்லையாம்.
இதுகுறித்து மாவட்ட பி.ஆர்.ஓ. பியாரி மோகன் திரிபாதி கூறுகையில், ரஹ்மான் ஆஜ்மீர் தர்ஹாவுக்கு வரும்போது மிக அடக்கமாகவும், விளம்பரப்படுத்தாமல் வந்து செல்வார். தான் வருவதை யாருக்கும் சொல்லாமல், சாதாரணமாக, பக்தர்களோடு பக்தர்களாக அமர்ந்து பிரார்த்தனையில் ஈடுபடுவார் என்றார்.
ரஹ்மான் பங்களாவுக்கு அடுத்த வீட்டில் வசிக்கும் சி.டி.ஜோஷி என்பவர் கூறுகையில், ஐந்து மாதங்களுக்கு முன்பு ரஹ்மான் இங்கு வந்திருந்தார். அவருடன் இரண்டு பெண்களும் வந்திருந்தனர். அப்போது அவர்களை யார் என்று எங்களுக்குத் தெரியவில்லை.
இப்போது ஆஸ்கர் விருது பெற்ற பின்னர்தான் வந்தவர் ரஹ்மான், அவருடன் வந்தவர்கள் தாயார் கரீமா பேகம் மற்றும் சகோதரி எனத் தெரிந்து கொண்டோம் என்றார்.
சுனிதா கோயல் என்ற 60 வயது மூதாட்டி கூறுகையில், இரண்டு நாட்கள் அவர்கள் வீட்டில் தங்கியிருந்தனர். பின்னர் தர்ஹாவுக்கு சென்று வந்தனர். இரண்டு பெண்மணிகளில் ஒருவர் என்னுடன் பேசினார். மதப்பற்று மிக்கவராக காணப்பட்ட அவர் மிக மென்மையாக பேசினார். அவர் ரஹ்மானின் சகோதரி என்று நாங்கள் நினைத்துக் கூட பார்க்கவில்லை.
ஏதோ, தென்னிந்தியாவைச் சேர்ந்தவர்கள் இங்கு வந்திருக்கிறார்கள் என்று மட்டும்தான் எங்களால் புரிந்து கொள்ள முடிந்தது என்றார்.
ரஹ்மானின் பங்களா அமைந்துள்ள பகுதி மிகவும் அமைதியானது. தர்ஹாவிலிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் இந்தப் பகுதி உள்ளதாம்.
இந்த பங்களாவின் முந்தைய உரிமையாளர் மகாராஷ்டிர மாநிலம் ஒளரங்கபாத்தைச் சேர்ந்த எஸ்.கே.டால்மியா என்பவராவார். டால்மியாதான், ரஹ்மானை அணுகி ஆஜ்மீரில் தனக்கு சொந்தமாக பங்களாக இருப்பதாக கூறி தங்க வைத்துள்ளார். அப்போதுதான் அந்த பங்களாவை வாங்க தீர்மானித்தாராம் ரஹ்மான்.


Click it and Unblock the Notifications











