நடிகர் விஜயகுமார் குடும்ப வழக்கு சென்னைபுறநகர் மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம்

நடிகர் விஜயகுமார் மகள் நடிகை வனிதா தனது தந்தையும், அண்ணன் அருண் விஜயும் தன்னைத் தாக்கியதாக மதுரவாயல் போலீசில் புகார் கொடுத்தார்.
இதையடுத்து விஜயகுமார் வனிதாவின் கணவர் ஆனந்தராஜ் தன்னைத் தாக்கி கையை உடைத்ததாக போலீசில் புகார் கொடுத்தார். இதன் பேரில் மதுரவாயல் போலீசார் ஆனந்தராஜை கைது செய்தனர். பின்னர் ஆனந்தராஜ் ஜாமீனில் வெளியே வந்தார்.
இதற்கிடையே வனிதா டிஜிபி ல்த்திகா சரணைச் சந்தித்து தனது தந்தை மற்றும் அண்ணன் மீது புகார் அளித்தார். மேலும், நிருபர்களைச் சந்தித்து தனது தந்தை வீட்டில் சட்டவிரோத செயல்கள் நடப்பதாகவும் அதை விரைவில் அனைவருக்கும் தெரிவிக்கப்போவதாகவும் கூறினார்.
வனிதா கொடுத்த புகாரின்பேரில் நடிகர் விஜயகுமார், அவரது மகன் அருண்விஜய் ஆகியோரைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இப்படி தந்தையும், மகளும் ஒருவர் மீது ஒருவர் சரமாரியாக புகார் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில் விஜயகுமார் மற்றும் வனிதா கொடுத்த புகார்களின் பேரில் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் சென்னை புறநகர் மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த வழக்குகளை மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனர் ராஜேந்திரன் தலைமையிலான போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











