twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    எளிமையான ஜீனியஸ் சுஜாதா- ஷங்கர்

    By Staff
    |

    Shankar
    மறைந்த எழுத்தாளர் சுஜாதா ஒரு எளிமையான ஜீனியஸ். அவரது மறைவை என்னால் இன்னும் நம்பவே முடியவில்லை என்று இயக்குநர் ஷங்கர் தெரிவித்துள்ளார்.

    சுஜாதா மறைவால் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பவர் ஷங்கர்தான். அவரது பெரும்பாலான படங்களுக்கு சுஜாதாதான் வசனம் எழுதியிருக்கிறார். தொழில் தவிர்த்து, இருவரும் மிக நெருக்கமான நண்பர்களாக இருந்தனர். சுஜாதாவை தனது தந்தை ஸ்தானத்தில் தான் வைத்திருந்தார் ஷங்கர்.

    சுஜாதாவின் மறைவினால் பெரிதும் கலங்கியுள்ள ஷங்கர், அவரை எளிமையான ஜீனியஸ் என புகழ்ந்துள்ளார்.

    இதுகுறித்து ஷங்கர் வெளியிட்டுள்ள செய்தியில், எழுத்தாளர் சுஜாதா ஒரு எளிமையான ஜீனியஸ், எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர். அவருடைய குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்.

    அவருடைய இழப்பு எழுத்துலகத்துக்கு மட்டுமில்லை திரை உலகிற்கும் தான். அவருடன் இந்தியன் படத்திலிருந்து, முதல்வன், பாய்ஸ், அந்நியன், சிவாஜி என்று நான்கு படங்களில் பணியாற்றி இருக்கிறேன். இந்த படங்களில் அவர் வசனம் எழுதியிருந்தாலும் அவருக்கு மிகவும் பொருத்தமான தீனி போடும் படம் ரோபோ.

    என்னுடைய கேரியரில் அவருடைய பெஸ்ட் வொர்க் இந்த படத்தில் இருக்கும் என்று நினைத்திருந்தேன்.

    அவரும் எனக்கு இதுதான் ரொம்ப பிடித்தமான புராஜெக்ட் என்று சொல்வார். இந்த படம் முடிவதற்குள்ளாகவே எங்களை விட்டு மறைந்து விட்டார்.

    ஒவ்வொரு படத்துக்காகவும் டிஸ்கஷனுக்காக பத்து நாட்கள் வெளியூர் போவோம். அந்த இனிமையான நாட்களை மறக்க முடியாது. கதை போக்கையும், அதிலுள்ள சிக்கல்களையும், குறைபாடுகளையும் மிக அழகாக அலசுவார்.

    அவருடைய சிந்தனை எப்பொழுதும் ஒரு கல்லூரி மாணவன் மாதிரி இளமையாக இருக்கும். எவ்வளவு பெரிய விஷயத்தையும் சுருக்கமாகவும், நவீனமாகவும், சுவாரசியமானதாகவும் எழுதிக்கூடியவர். சமயத்தில் நண்பராகவும், சமயத்தில் ஒரு ஆசிரியராகவும் நான் அவரை உணர்வேன்.

    அவருக்கு பணத்தாசை கிடையாது. சம்பளம் கேட்கவே தெரியாதவர். சம்பளம் பற்றிப் பேசினால், 'எதாவது கொடுங்க' என்பார். ஆசைகள் ஏதும் இல்லாத எளிய மனம் கொண்டவர்.

    யாரையும் காயப்படுத்த மாட்டார். எல்லோரையும் மதிக்கும் குணமுடையவர். திறமை எங்கிருந்தாலும் கண்டெடுத்து பத்திரிகைகள் வாயிலாக அவர்களை அடையாளம் காட்டுவார். எதற்கும் கலங்க மாட்டார், எதற்கும் உணர்ச்சி வசப்பட மாட்டார். பாசாங்கு இல்லாதவர்.

    அவர் ஓபன் ஹார்ட் சர்ஜரி செய்துகொள்ளும் போதுகூட அவர் அதை ஒரு பெரிய விஷயமாக கருதவில்லை. கூல் அண்டு டேக் இட் ஈசி என்பார்.

    எனக்கு ஏதேனும் ஒரு பிரச்சனை ஏற்பட்டு அவருக்கு போன் பண்ணினால் அதற்கு அவர் மிகச் சுலபமாக தீர்வு சொல்லி நொடியில் தீர்த்து விடுவார். அதற்கு நன்றி சொன்னால், எதற்கு நன்றியெல்லாம் நீ என் மகன் மாதிரி என்பார்.

    இந்த இழப்பு அவருடைய குடும்பத்திற்கு மட்டுமல்ல எனக்கும் தான்... இதை என்னால் அவரது பாணியில் 'கூலாகவோ ஈசியாகவோ' எடுத்துக்க முடியவில்லை என்று கூறியுள்ளார் ஷங்கர்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X