விடிய, விடிய நடந்த விஜயகுமார் - வனிதா தகராறு.. ஆகாஷ் அம்மாவிடம் குழந்தை ஒப்படைப்பு

எனவே விஜய் ஸ்ரீஹரியை முதல் கணவர் ஆகாஷின் தாயாரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.
நடிகர் விஜயகுமாரின் மகள் நடிகை வனிதாவுக்கும், அவருடைய முதல் கணவர் ஆகாஷுக்கும் பிறந்த மகன் விஜய் ஸ்ரீஹரி. அவனை தன்னிடம் ஒப்படைக்கக் கோரி வனிதா தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் 2 வாரத்திற்குள் விஜய் ஸ்ரீஹரியை வனிதாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கடந்த 23-ந் தேதி ஆகாஷுக்கு உத்தரவிட்டது.
இந்த நிலையில் நடிகர் விஜயகுமார் தனது பேரன் விஜய் ஸ்ரீஹரியுடன் ஹைதராபாத்தில் இருந்து விமானம் மூலம் நேற்று முன்தினம் இரவு சென்னை வந்தார். இதை அறிந்த வனிதா தனது 2-வது கணவர் ஆனந்தராஜுடன் விமான நிலையத்திற்குச் சென்றார்.
அப்போது விஜயகுமாருக்கும், வனிதாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் அவர்களை பணியில் இருந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் டிக்பால் மீனம்பாக்கம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றார்.
நடிகர் விஜயகுமாரிடம், விமான நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆரோக்கிய ரவீந்திரன் தனியறையில் விசாரணை நடத்தினார். அப்போது அறையின் கதவை திறந்துக் கொண்டு வனிதா உள்ளே சென்று மகனைப் பறிக்க முயன்றார். போலீஸ் அதிகாரிகள் முன்னிலையில் ஒருவரையொருவர் தரக்குறைவான வார்த்தைகளால் திட்டினார்கள்.
மேலும் போலீஸ் நிலையத்தில் வனிதா போலீஸ் அதிகாரிகளை திட்டி தனது மகனை ஒப்படைக்காவிட்டால் தற்கொலை செய்வேன் என்றார். இரவு 3 மணி வரை அவர்களிடம் விசாரணை நடந்தது.
பாட்டியுடன் ஒப்படைப்பு
இதற்கிடையே ஆகாஷுக்கு போலீசார் தகவல் அளித்தனர். இதையடுத்து ஆகாஷின் அம்மா மகேஸ்வரி அதிகாலை 3 மணிக்கு போலீஸ் நிலையத்துக்கு வந்தார். அவருடன் விஜய் ஸ்ரீஹரியை அனுப்பக் கூடாது என்று வனிதா கூறினார். பின்னர் அங்கிருந்த விஜயகுமாரை போலீசார் காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர். வனிதாவை அவருடைய கணவர் ஆனந்தராஜ் மற்றும் நண்பர்கள் அழைத்து சென்றனர்.
டெல்லியில் இருந்த ஆகாஷ் விமான நிலைய போலீசாருக்கு பேக்ஸ் மூலம் செய்தி அனுப்பினார். அதில், விஜய் ஸ்ரீஹரியை, விஜயகுமாருடன் நான் தான் அனுப்பி வைத்தேன். தற்போது பிரச்சினை ஏற்பட்டு உள்ளதால் குழந்தையை எனது தாயார் மகேஸ்வரியுடன் அனுப்பி வையுங்கள். நான் சென்னை வந்து போலீசார் முன் விளக்கம் அளிக்கிறேன்,' என்று கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து காலை 8 மணிக்கு சிறுவன் விஜய் ஸ்ரீஹரியை போலீசார் ஆகாஷின் தாய் மகேஸ்வரியுடன் அனுப்பி வைத்தனர்.
பேரன் விஜய் ஸ்ரீ ஹரி விவகாரத்தில் விஜயகுமாரும் அவர் மனைவி மஞ்சுளாவும் எக்காரணம் கொண்டும் தலையிடக் கூடாது என உயர்நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டிருந்தது நினைவிருக்கலாம்.


Click it and Unblock the Notifications











