மரக்கட்டை மாதிரி நடித்த மம்முட்டி! - ஒரு தயாரிப்பாளரின் புகார்
எனது வந்தே மாதரம் படத்தில் நடித்த மம்முட்டி வேண்டுமென்றே தாமதம் செய்ததால்தான் படம் லேட்டானது. அவர் இந்தப் படத்தில் ஆர்வம் காட்டாமல் மரக்கட்டை மாதிரி நடித்தார், என அப்படத்தின் தயாரிப்பாளர் ஹென்றி குற்றம்சாட்டினார்.
மம்முட்டி, அர்ஜுன் இணைந்து நடித்த வந்தே மாதரம் படம் தற்போது ரிலீசாகி ஓடிக்கொண்டிருக்கிறது. மலையாளத்திலும் இந்தப் படம் ரிலீஸாகியுள்ளது. இதில் கதாநாயகியாக சினேகா நடித்துள்ளார். அரவிந்தன் இயக்கிய இப்படத்தை பங்கஜ் புரொடக்ஷன்ஸ் சார்பில் ஹென்றி தயாரித்துள்ளார்.
இந்த படம் 3 வருடங்களாக பல்வேறு பிரச்சினைகளால் இழுத்தடித்து திரைக்கு வந்துள்ளது. தாமதத்துக்கு மம்முட்டிதான் காரணம் என்று ஹென்றி குற்றம் சாட்டியுள்ளார். இவர் ஏற்கனவே மம்முட்டியை வைத்து மறுமலர்ச்சி படத்தையும் மலையாளத்தில் 15 வருடங்களுக்கு முன்பு மம்முட்டிக்கு தேசிய விருது பெற்று தந்த யவனிகா படத்தையும் தயாரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சேரன் இயக்கி வெற்றிகரமாக ஓடிய பாரதி கண்ணம்மா படத்தின் தயாரிப்பாளரும் இவர்தான். அவர் கூறுகையில், "வந்தே மாதரம் படம் தாமதத்துக்கு மம்முட்டியே காரணம். ஆரம்பத்தில் இருந்து இப்படத்தில் நடிக்க அவர் ஆர்வம் காட்டவில்லை. கால்ஷீட் குளறுபடிகள் செய்தார். ஏனோ தானோ என்றுதான் நடித்தார். சண்டைக்காட்சிகளில் மரக்கட்டை போலத்தான் நடித்தார். குறிப்பாக கிளைமாக்ஸ் சண்டை காட்சியில் சண்டை போடவே மறுத்து விட்டார். மம்முட்டியால் படத்தில் நிறைய சீன்கள் வெட்டி எறியப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது," என்றார்.
எல்லாம் ஒன்றுதான்..
இதுகுறித்து மம்முட்டியிடம் கேட்டபோது, "இதற்கெல்லாம் நான் பதில் சொல்லவே விரும்பவில்லை. சிலர் என்ன நல்ல நடிகன் என்கிறார்கள். இவர் என்னை கட்டை என்கிறார். எனக்கு எல்லாம் ஒன்றுதான்" என்றார்.


Click it and Unblock the Notifications











