விஜய் அரசியலில் குதிப்பது தவிர்க்க முடியாதது!-எஸ்ஏ.சந்திரசேகர்
எஸ்.ஏ.சந்திரசேகர் தயாரிப்பில் உருவாகியுள்ள 'வெளுத்துக்கட்டு' திரைப்படத்தின் பாடல் அறிமுக விழா திருச்சியில் நடந்தது. விழாவில் கலந்து கொண்ட எஸ்.ஏ.சந்திரசேகர் நிருபர்களிடம் கூறியதாவது:
நடிகர்களை நம்பி படம் எடுக்காமல் கதாபாத்திரத்தை நம்பி படம் எடுப்பது என்னுடைய வழக்கம். கதாபாத்திரத்தை நம்பி படம் எடுத்தால் யாரை வேண்டுமானாலும் வைத்து படம் எடுக்கலாம். படத்தில் ஏதாவது விஷயத்தை சொல்ல நினைப்பவன் நான்.
இப்போது படம் எடுப்பது ரொம்ப எளிது. ஆனால் அந்த படத்தை மக்களிடம் கொண்டு சென்று, வெற்றி பெறுவது கடினம். இதை எப்படி சமாளிப்பது என்று திரைஉலகம் திணறி கொண்டு இருக்கிறது.
விஜய் படங்களுக்கு பெரும் வரவேற்பு!:
நடிகர் விஜய் தற்போது அரசியலுக்கு வருவதற்கு அஸ்திவாரம் போட்டுள்ளார். அவர் நடிக்கும் படங்களுக்கு மக்களிடையே மிகுந்த வரவேற்பு உள்ளது. இதனால் அவரது செல்வாக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
விஜய் அரசியலில் ஈடுபடுவது தவிர்க்க முடியாதது. உரிய நேரத்திற்காக அவர் காத்து இருக்கிறார்.
தமிழ்நாடு முழுவதும் நடிகர் விஜய் ரசிகர் மன்றம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. நடிகர் விஜய் எனக்கு மகனாக கிடைத்ததற்காக கடவுளுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
நான் சிகப்பு மனிதன் படத்தில் விஜய்:
ரஜினியை வைத்து நான் இயக்கிய 'நான் சிகப்பு மனிதன்' படத்தை 'ரீமேக்' செய்து தயாரிக்க இருக்கிறேன். அதில் விஜய் நடிக்கிறார். ஆனால் நான் இயக்கவில்லை. இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுத்து நான் படத்தை மட்டும் தயாரிக்க இருக்கின்றேன். இது போன்று என்னுடைய பழைய படங்கள் சிலவற்றை இந்த காலத்துக்கு ஏற்ப 'ரீமேக்' செய்யப் போகிறேன் என்றார்.
படங்கள் ஓடாவிட்டால், பரபரப்பை ஏற்படுத்தி படத்தை ஓடச் செய்ய, நான் அரசியலுக்கு வரப் போகிறேன் என்று நடிகர்கள் பேச ஆரம்பிப்பது தமிழ் ரசிகர்களுக்கு புதிதல்லவே!


Click it and Unblock the Notifications












