கோலிவுட் - 2008

நல்ல பல படங்கள் வெளியாகின. நட்சத்திர திருமணங்கள், பிரபலங்களின் மறைவுகள், எதிர்பாராத போராட்டங்கள், விவாகரத்துகள் என பிசியான ஆண்டாக 2008 கோலிவுட்டுக்கு அமைந்தது.
நடிகர் சிரஞ்சீவி கட்சி ஆரம்பித்தார். ஏற்கனவே இருந்த பார்வர்ட் பிளாக்கிலிருந்து விரட்டப்பட்ட நடிகர் கார்த்திக்கும் அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி என்ற புதுக் கட்சியை ஆரம்பித்தார். நடிகர் சரத்குமார், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியைத் தொடங்கினார்.
தமிழ் சினிமாவில் 2008ம் ஆண்டு தயாரான நேரடித் தமிழ்ப் படங்கள் 90.
இத்தனை படங்கள் வந்தாலும் கூட 15 படங்கள் மட்டுமே செஞ்சுரி அடித்தவை.
கமல்ஹாசனின் தசாவதாரம், ஜெய், ஸ்வாதி நடிப்பில் வெளியான சுப்ரமணியபுரம், ஜெயம் ரவி, திரிஷாவின் சந்தோஷ் சுப்ரமணியம், அஜீத்தின் பில்லா, நரேன்-அஜ்மலின் அஞ்சாதே, தனுஷ்-நயனதாராவின் யாரடி நீ மோகினி, தனுஷின் பொல்லாதவன், விஜய்யின் குருவி, ரித்தீஷின் நாயகன், விஷாலின் மலைக்கோட்டை, ஜீவனின் தோட்டா, சுந்தர்.சி.யின் சண்டை, சூர்யாவின் வேல் ஆகியவை 100 நாட்களைத் தாண்டி ஓடிய படங்கள்.
2008ல் ரஜினி - கமல்:
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு 2008ம் ஆண்டு மற்றும் ஒரு சம்பவங்கள் நிறைந்த ஆண்டாக இருந்தது.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட குசேலன் அவரை மகிழ்ச்சிப்படுத்தவில்லை. அதேசமயம், பிரமாண்டமான எந்திரன் படத்தில் நடிக்கத் தொடங்கியிருக்கிறார். நாளுக்கு நாள் படத்தின் பட்ஜெட் எகிறிக் கொண்டே போவதாலும், சன் பிக்சர்ஸின் தயாரிப்பு என்பதாலும் படம் குறித்த எதிர்பார்ப்புகள் அதிகம் உள்ளன.
ஓகனேக்கல் விவகாரத்தில் ரஜினி பேசிய பேச்சால், கர்நாடகத்தில் போராட்டங்கள் வெடித்தன. ரஜினி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன.
ஆனால் தான் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை என்று கூறிய ரஜினி பின்னர் வருத்தம் தெரிவித்ததால், போராட்டங்கள் அடங்கின.
இலங்கைத் தமிழர்களுக்காக நடந்த உண்ணாவிரதப் போராட்டத்தி்ல, விடுதலைப் புலிகளை மறைமுகமாக அவர் பாராட்டிப் பேசியதை திரையுலகினர் மட்டுமல்லாமல் ஈழ ஆதரவு அரசியல் தலைவர்களும், தமிழார்வலர்களும் வரவேற்றனர்.
தனிக் கட்சி தொடங்க வேண்டும் என்று பல காலமாக வலியுறுத்தி வரும் ரசிகர்களை திடீரென சென்னைக்குக் கூட்டி வந்து அவர்கள் மனதில் தோன்றிய கேள்விகளைக் கேட்கக் கூறி, அதற்கு நச் சென்று பதிலளித்து குஷிப்படுத்தினார் சூப்பர் ஸ்டார்.
கமல்ஹாசனைப் பொறுத்தவரை இந்த ஆண்டு ஒரு மெகா ஆண்டு. இந்தியாவே எதிர்பார்த்த தசாவதாரம் வெளியாகி அனைவரையும் பிரமிக்க வைத்தது. அப்படத்தில் அவர் ஏற்று நடித்த சில கதாபாத்திரங்கள் படு வேகமாக பிரபலமடைந்தன. குறிப்பாக பல்ராம் நாயுடு கேரக்டரை இமிடேட் செய்து பேசாதவர்களே அல்லது பேச முயலாதவர்களே இல்லை எனலாம்.
தசாவதாரத்தை முடித்த கையோடு மர்மயோகிக்கு திட்டமிட்டிருந்தார் கமல். ஆனால் நிதிப் பிரச்சினையில் படம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. அடுத்த படமான தலைவன் இருக்கிறான் -ஐ இயக்கி, நடிக்கும் முயற்சியில் கமல்ஹாசன் ஈடுபட்டிருக்கிறார்.
மறைந்த பிரபலங்கள்..:
தமிழ் சினிமாவின் ஜாம்பவான் கலைஞர்கள் சிலர் இந்த ஆண்டில் மறைந்து திரையுலகை மட்டுமல்லாமல், ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தினர்.
பழம்பெரும் வில்லன் நடிகர் எம்.என்.நம்பியாரின் மறைவு அனைத்து திரை ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது. 1000 படங்களுக்கு மேல் நடித்த அற்புதமான நடிகரான நம்பியார் உடல் நலக்குறைவு மற்றும் வயோதிகத்தால், நவம்பர் 19ம் தேதி மரணமடைந்தார்.
மிகப் பெரிய இயக்குநர்களில் ஒருவரான ஸ்ரீதர், அக்டோபர் 20ம் தேதி மரணமடைந்தார். நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்டிருந்த ஸ்ரீதர் காதலுக்குப் புது மொழியும், புது வடிவும் கொடுத்த சிறந்த இயக்குநர் ஆவார்.
எழுத்தாளர், அறிவாளி, அறிவியலாளர், தமிழார்வலர், திரைக்கதை ஆசிரியர், வசனகர்த்தா என பன்முகம் கொண்டா சுஜாதாவும் இந்த ஆண்டுதான் மறைந்தார். பிப்ரவரி 27ம் தேதி சுஜாதா இறந்தபோது, எழுத்துலகும், இலக்கிய உலகும், திரையுலகும் சேர்ந்து வருந்தின.
வித்தியாசமான வில்லனாகவும், சிறந்த குணச்சித்திர நடிகராகவும் அறியப்பட்ட ரகுவரன் மார்ச் 19ம் தேதி மாரடைப்பால் காலமானார்.
அதேபோல ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான ஜீவா, ரஷ்யாவுக்கு தாம் தூம் படத்தின் ஷூட்டிங்குக்காக போன இடத்தில் உயிரிழந்தார்.
நடிகர் பாண்டியன், குணால், குன்னக்குடி வைத்தியநாதன், பூரணம் விஸ்வநாதன், தேனி குஞ்சரம்மாள், தியாகராஜ பாகவதரின் மனைவி ராஜாம்பாள், பிரபு தேவாவின் மகன் விஷால், பழம்பெரும் தெலுங்கு நடிகர் சோபன்பாபு ஆகியோரும் 2008ல் மறைந்த திரையுலகினர்.
அடுத்த பக்கம்


Click it and Unblock the Notifications











