பெங்களூரில் விஷ்ணுவர்தனுக்கு நினைவு இல்லம்!

தனது 200 வது படமான ஆப்தரக்ஷகாவில் நடித்துக் கொண்டிருந்த விஷ்ணுவர்தன், கடந்த டிசம்பர் 30-ம் தேதி திடீரென மாரடைப்பால் மரணமடைந்தார்.
விஷ்ணுவர்த்தனின் உடல், பெங்களூர் அபிமான் ஸ்டூடியோ வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் அவருக்கு கோவில் வடிவத்தில் நினைவு இல்லம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
விஷ்ணுவர்தன் ஏராளமான ரசிகர்களைக் கொண்டவர். அவரது மரணத்துக்குப் பின் வெளியான ஆப்தரக்ஷகாவுக்கு பெரும் வெற்றியைத் தந்தனர் ரசிகர்கள். எனவே ஆப்தரட்சகா படத்தை தயாரித்த தயாரிப்பாளர் கிருஷ்ணா பிரஜ்வெல், இந்த நினைவுச் சின்னத்துக்கான முழுப் பொறுப்பையும் ஏற்றுள்ளார்.
விஷ்ணுவர்த்தனின் மனைவி பாரதியிடம் இதற்கான அனுமதியையும் அவர் பெற்றுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "விஷ்ணுவின் சமாதி அருகே இந்த கோவில் அமைக்கப்படும். அந்த கோவிலுக்குள் விஷ்ணுவர்த்தனின் முழு உருவ வெண்கலச் சிலை நிறுவப்படும்.
மார்பளவு சிலை அமைக்க வேண்டும் என்று முதலில் திட்டமிட்டு இருந்தேன். ஆனால் பாரதி விஷ்ணுவர்த்தனின் யோசனையின்பேரில், மார்பளவு சிலைக்கு பதிலாக முழு உருவ சிலை அமைக்கும்படி யோசனை தெரிவித்தார்.
இந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடக்கும் விஷ்ணுவர்தனின் முதலாம் நினைவஞ்சலியின்போது கோயில் வேலையும் சிலையை நிறுவுவதும் முடிந்துவிடும்.." என்கிறார்.
கோயில் வேலைகள் இப்போதே நடைபெறத் துவங்கிவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











