ரஜினி - சிரஞ்சீவி பங்கேற்ற 'எவர்கிரீன் எய்ட்டீஸ்' பார்ட்டி!

அன்றைக்கு வந்த படங்கள், அதில் தெரிந்த நடிப்பு, இசை எல்லாமே மனதைத் தொடும் விதத்தில் அமைந்திருந்தன.
அந்த காலகட்டத்தில் நடிக்க வந்த நடிகர்களில் பெரும்பாலானோர் நடிப்பில் சிகரம் தொட்டவர்கள்தான். எழுபதுகளிலேயே ரஜினி அறிமுகமாகி தென்னகத் திரையை கலக்க ஆரம்பித்துவிட்டிருந்தாலும், எண்பதுகளின் ஆரம்பத்தில்தான் அவர் சூப்பர் ஸ்டாராகத் திகழ ஆரம்பித்தார்.
ரஜினிக்குப் பின் எண்பதுகளில் நடிக்க வந்த மோகன், பிரபு, கார்த்திக், அம்பிகா, ராதா, சுமலதா, ஜெயசுதா, சிரஞ்சீவி, மோகன்லால், மம்மூட்டி, வெங்கடேஷ்... என சாதனை நடிகர்களின் பட்டியல் பெரிது.
எண்பதுகளில் கொடிகட்டிப் பறந்த இந்த நட்சத்திரங்கள் அனைவரும் ஒன்று கூடி தங்களின் அந்த நாள் நினைவுகளை பகிர்ந்து கொள்ளும் ஒரு ப்ளாஷ்பேக் நிகழ்ச்சியை கடந்த ஆண்டு சுகாசினியும் லிஸி ப்ரியதர்ஷனும் ஏற்பாடு செய்திருந்ததனர். இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பங்கேற்று கேக் வெட்டி, தனது சகாக்களுக்கும் ஊட்டி விட்டு அந்த நிகழ்ச்சியையே கலகலப்பாக்கனார்.
இந்த ஆண்டும் அந்த மலரும் நினைவுகள் நிகழ்வின் தொடர்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர் சுகாசினியும் லிஸியும். தவறாமல் கலந்து கொண்டார் ரஜினிகாந்த்.
இந்த முறை மோகன்லால், சிரஞ்சீவி, வெங்கடேஷ், சரத்குமார் மற்றும் அர்ஜூன் ஆகிய 5 நடிகர்கள் கூடுதலாக பங்கேற்றனர். இவர்களுடன் சேர்த்து மொத்தம் 29 கலைஞர்கள் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்தனர்
நடிகைகளில், அம்பிகா, ராதா, லிஸி, சுகாசினி, ராதிகா, பூர்ணிமா, ஷோபனா, ஜெயசுதா, சுமலதா, ரேவதி, நதியா, ரம்யா கிருஷ்ணன்... ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த ஆண்டும் கேக் வெட்டி அனைவருக்கும் தந்தார் ரஜினி. கடந்த ஆண்டு இந்த நிகழ்வில் கலந்து கொண்டு தனது நண்பர் விஷ்ணுவர்தன் இந்த ஆண்டு உயிருடன் இல்லையே என்ற வேதனையை அவர் சக நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளத் தவறவில்லை.
இந்த நிகழ்ச்சி பற்றி லிஸி ப்ரியதர்ஷன் கூறுகையில், "உலகிலேயே இந்த மாதிரி ஒரு க்ளப் அமைத்திருப்பது நம்ம தென்னிந்திய நடிகர்களாகத்தான் இருக்கும். இதற்கு எவர்கிரீன் எய்ட்டிஸ் என்று பெயர் வைத்திருக்கிறோம். வேறு யாரும் இதுபோல செய்திருக்கிறார்களா தெரியவில்லை. தமிழகம், ஆந்திரா, கேரளா மற்றும் கர்நாடகா என தென் மாநிலங்களின் சாதனைக் கலைஞர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றதுதான் இதன் சிறப்பு. இனி இது தொடரும்" என்றார்.
அநேகமாக அடுத்த ஆண்டு வேறு மாநிலத்தில் இந்த நிகழ்ச்சியை நடத்தத் திட்டமிட்டிருக்கிறார்களாம்.


Click it and Unblock the Notifications











