இருட்டுக்குள் இருந்து ஒரு வெடி சிரிப்பு..அசத்திய ரஜினிகாந்த்..நடிகர் ஆனந்த்ராஜின் நெகிழ்ச்சி அனுபவம்
படப்பிடிப்பின்போது நடிகர் ரஜினிகாந்த் மூலம் தனக்கு ஏற்பட்ட நெகிழ்ச்சியான அனுபவம் குறித்து ஆனந்த்ராஜ் பேட்டி அளித்துள்ளார்.
நடிகர் ஆனந்தராஜ் ரஜினிகாந்த் உடன் ராஜாதி ராஜா, பாட்ஷா உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர், அவர் ரஜினியுடன் தனக்கு ஏற்பட்ட நெகிழ்ச்சியான அனுபவத்தை சமீபத்தில் பகிர்ந்துள்ளார்.
பாட்ஷா படத்தின் போது தனக்கு நேர்ந்த அனுபவம் மூலம் சிவாஜி கணேசன் போல் ரஜினியின் பண்பும் உள்ளது என்று அவர் நெகிழ்ந்து குறிப்பிட்டுள்ளார்.

சிவாஜி கணேசனின் எண்ணம்போல் சிவாஜிராவின்(ரஜினி) எண்ணமும்
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மிகப்பெரிய ஆளுமை அவரைப்பற்றி விவரிப்பது என்றால் ஒரு கட்டுரை போதாது. தன்னுடைய தொழிலில் அவர் காட்டிய தீவிர ஈடுபாடு அவரை உச்சத்தில் வைத்திருந்தது. நடிப்புலகின் பல்கலைக்கழகம் என மற்றவர்களை பேச வைத்தது. இதற்கு முக்கிய காரணம் அவருடைய ஈடுபாடு தான். சிவாஜி கணேசன் படப்பிடிப்பு முடிந்தாலும் மற்றொருவர் நடிப்பதை உட்கார்ந்து பார்ப்பதை வழக்கமாக வைத்திருந்தார்.

கௌரவம், வியாட்நாம் வீடு ஹீரோ பாத்திரங்கள்
இதற்கு அவர் சொன்ன காரணங்கள் இரண்டு. ஒன்று ஒரு காட்சியில் தன்னுடன் நடிப்பவர்கள் எப்படி நடிக்கிறார்கள் என்பதை நான் உணர்ந்து கொண்டால் தான் அதற்கேற்ற நடிப்பை என்னால் வெளிப்படுத்த முடியும், இரண்டாவதாக ஒவ்வொருவருடைய மேனரிசத்தையும் தான் கவனித்து கற்க விரும்புவதாகவும் தெரிவித்திருந்தார். இதை கௌரவம், வியாட்நாம் வீடு போன்ற படங்களில் பார்க்கலாம்.

பாட்சா படத்தில் ஆனந்த்ராஜுக்கு ஏற்பட்ட நெகிழ்ச்சி அனுபவம்
இந்த பழக்கம் படப்பிடிப்பு தளத்தில் மட்டுமல்ல அவர் எங்கு சென்றாலும் ஒவ்வொருவருடைய மேனரிசத்தையும் கூர்ந்து கவனிக்க கூடியவர் என்பது திரை உலகில் எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. அதனால் தான் அவர் ஏற்ற கதாபாத்திரங்களில் தனித்தனியாக பிரகாசிக்க முடிந்தது. இப்போது விஷயத்திற்கு வருவோம். நடிகர் ஆனந்த்ராஜ் ரஜினிகாந்த் உடன் ராஜாதி ராஜா படத்தில் வில்லனாக நடித்திருப்பார், அதற்கு அடுத்து ரஜினியின் சூப்பர் டூப்பர் ஹிட் படமான பாட்ஷாவில் ஆனந்த்ராஜ் வில்லனாக வருவார். பாட்ஷா படத்தில் ரஜினிகாந்தை ஒரு துள்ளல் பாடலுடன் அறிமுகப்படுத்துவார்கள், பின்னர் அவர் சாதாரணமாக ஆட்டோ ஓட்டுநராக இருப்பதை காண்பிப்பார்கள். அப்படிப்பட்ட ரஜினிகாந்த் ஒரு கட்டத்தில் பழைய பாட்சா முகத்தை காட்டுவார். அந்த திருப்பத்தை ஏற்படுத்தும் காட்சி ஆனந்த்ராஜ் நடித்த காட்சி.

ரஜினிகாந்தின் அற்புதமான பண்பு-வியந்த ஆனந்த்ராஜ்
ஊருக்குள் சாதாரணமாக ஆட்டோ ஓட்டி பிழைத்து வரும் ரஜினியையும் அவரது தம்பியான சப் இன்ஸ்பெக்டரையும் ஆனந்த்ராஜ் தேவையில்லாமல் சீண்டுவார். இதனால் ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த ரஜினி அனைவரையும் போட்டு துவைத்து எடுப்பார். இது படத்தில் வரும் முக்கியமான திருப்புமுனைக்காட்சி. இது பற்றி பாட்ஷா படத்தில் நடந்த சுவாரசிய சம்பவம் பற்றி நடிகர் ஆனந்த்ராஜ் பகிர்ந்துள்ளார். அதில் அவர் நடிகர் ரஜினிகாந்த் சிவாஜி கணேசன் போன்று சக கலைஞர்களை பாராட்டி ஊக்குவிக்கும் மனநிலை கொண்டவர் என்பதை நானே என்னுடைய நேரடியான அனுபவத்தில் தெரிந்து கொண்டேன் என்று தெரிவித்துள்ளார்.

பாட்சா சண்டைக்காட்சிகள் படபிடிப்பில் நடந்த சம்பவம்
அது குறித்த சம்பவத்தை அவர் கூறுகையில், "பாட்ஷா படத்தின் ஷூட்டிங் அவர் வீட்டு அருகில் நான் ரவுடிகளுடன் சென்று மிரட்டுவது போன்ற காட்சி. அதற்கு முன்னர் ரஜினிகாந்த் சம்பந்தப்பட்ட சண்டைக் காட்சிகளை எடுத்து முடிக்கப்பட்டு இரவு 12 மணி ஆன நிலையில் அவர் கிளம்பி விட்டார். மீதி உள்ள காட்சிகளை எடுத்தோம். நான் ரஜினிகாந்தின் தம்பியான சப்-இன்ஸ்பெக்டரை மிரட்டும் காட்சி அதில் ஒரு வசனம் வரும் "தம்பி போலீஸ் ஸ்டேஷன் எனக்கு மாமியார் வீடு மாதிரி 3 நாள்ல மாலை மரியாதை போட்டு அனுப்பிட்டாங்க. தங்கச்சி புடவை பிடித்து இழுத்ததினால் என்னை ஜெயிலுக்கு அனுப்பின, அடுத்து உங்க வீட்ல யார் இருக்கிறா? என கேட்கும்போது அவர் அம்மா எட்டிப் பார்ப்பார்.

அந்த வசனத்தைச் சொன்னவுடன் இருட்டுக்குள்ளிருந்த வந்த வெடிச்சிரிப்பு
நான் கையெடுத்து கும்பிட்டு வணங்கங்கம்மோவ் என்பேன், நான் அந்த வணக்கங்கம்மோவ்னு சொன்ன அடுத்த நொடி 'ஹா ஹா' என்று இருட்டுக்குள்ளிருந்து ஒரு அட்டகாசமான வெடிச்சிரிப்பு வந்தது நாங்கள் எல்லோரும் அந்த திசையில் பார்த்தோம் எங்களுக்கு தெரியவில்லை. இருட்டில் ரஜினிகாந்த் அமர்ந்து இந்த காட்சியை பார்த்து ரசித்து பாராட்டி சிரிச்சிக்கிட்டிருக்கார் என்பது பின்பு தான் தெரிந்தது. அவர் வீட்டுக்கு போகவில்லை, மத்தவங்க எப்படி நடிக்கிறாங்கன்னு பார்த்து கிரகிக்கும் அந்த குணம்.

சிவாஜி கணேசனை ஞாபகப்படுத்தும் ரஜினிகாந்த்
இது போன்ற எண்ணம் சிவாஜி கணேசனுக்கும் உண்டு என்று சொல்வார்கள். சிவாஜி போல சிவாஜிராவிடமும் (ரஜினி) அதை நான் பார்த்தேன். ஒரு மிகப்பெரிய நடிகர் சாதாரண நடிகர் தானே என்ன நடிக்கப் போகிறார்கள் என்று நினைக்காமல் தன்னுடைய காட்சி முடிந்து வீட்டுக்கு செல்லும் நேரத்தில் அமர்ந்து கவனித்து பாராட்டியும் சென்ற அவருடைய குணம் மிக உயர்ந்தது. அதை நானும் இப்பொழுதெல்லாம் பின்பற்றுகிறேன்" என்று ஆனந்த்ராஜ் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications