கடைசி வரை போராட்டம் தான்.. கேன்சருடன் மல்லுக்கட்டிய இர்ஃபான் கான்.. கடைசியில் ஏன் கைவிட்டார்?
மும்பை: சின்ன வயசுல விரும்பிய கிரிக்கெட் விளையாட்டில் சாதிக்க முடியல, அம்மாவோட இறுதி சடங்குல கலந்துக்க முடியல, தன்னோட கேன்சர் போராட்டத்திலும் தோல்வி என கடைசி வரைக்கும் இர்ஃபான் கானின் வாழ்க்கை போராட்டம் நிறைந்த ஒன்றாகவே இருந்தது.
Recommended Video
கடந்த இரண்டு ஆண்டுகளாக அவருக்கு இருந்த வலி இப்போது, அவரை போலவே இல்லாமல் போயிருக்கும். நிம்மதியாக உறங்கும் இர்ஃபான் கான் இந்த இரண்டு ஆண்டுகளாக எப்படி வலிமையுடனும் உறுதியுடனும் Neuro endocrine Tumor எனும் அரிய வகை கேன்சருடன் மல்லுக்கட்டினார் என்பது தெரியுமா?

பாலிவுட், ஹாலிவுட் என கலக்கி வந்த நடிகர் இர்ஃபான் கான், கடந்த 2018ம் ஆண்டு மார்ச் 5ம் தேதி தான் ஒரு கடுமையான நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறேன் என சமூக வலைதளத்தில் முதன்முறையாக தன்னுடைய உடல்நலக் குறையை வெளிப்படுத்தினார்.
கடந்த 15 நாட்களாக உடம்பு ரொம்ப முடியலை; மருத்துவர்கள் பல டெஸ்ட்களை நடத்தி உள்ளனர். விரைவில் உங்களுக்கு எனக்கு நடந்த விஷயங்களை நானே தெரிவிக்கிறேன். அதுவரை எந்தவொரு கட்டுக் கதைகளையும் நீங்களே கிளப்பி விட வேண்டாம் என பதிவிட்டிருந்தார்.
பின்னர் மார்ச் 16, 2018 அன்று, அரியவகை கேன்சர் நோயால் தான் பாதிக்கப்பட்டிருப்பதாக வெளியிட்டு, பாலிவுட் ரசிகர்கள் மற்றும் பிரபலங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.
தனக்கு Neuro endocrine Tumor பாதிப்பு இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர் என்றும், இந்த நோயை நிச்சயம் ரசிகர்கள் மற்றும் தன்னைச் சுற்றி இருப்பவர்களின் அன்பால் வென்று மீண்டும் வருவேன் எனக் கூறிய இர்ஃபான், சிகிச்சைக்காக லண்டன் சென்றிருந்தார்.
இர்ஃபான் கானின் உடல் நலம் சீரானதாக மட்டுமே அறிவிப்புகள் வெளியாகின. வேறு எந்தவொரு விரிவான அறிக்கை ஏதும் அப்போது வெளியாகவில்லை.
தனது உறுதியான போராட்டத்தால், கேன்சர் நோயில் இருந்து மீண்டார் இர்ஃபான் கான் என ஊடகங்களும், ரசிகர்களும் இர்ஃபான் கானை பாராட்டினர்.
கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், பல பாலிவுட் படங்கள் மற்றும் ஹாலிவுட் படங்களை மிஸ் செய்தார் நடிகர் இர்ஃபான் கான்.
உண்மையில், அந்த படங்கள் தான் இர்ஃபான் கானின் திறமையான நடிப்பை இழந்தன என்று தான் சொல்ல வேண்டும்.
எல்லா பிரச்சனைகளும் ஓவர், இனிமே ஒன்றுமில்லை மீண்டும் பழையபடி நடிக்கத் தொடங்கினார் இர்ஃபான் கான். கடந்த ஆண்டு பாலிவுட் இயக்குநர் ஹோமி அடாஜானியா இயக்கத்தில் வெளியான ஆங்கிரேஸி மீடியம் படத்தில் நாயகனாக நடித்திருந்தார்.

கடந்த ஆண்டு ஏப்ரல் 3ம் தேதி சிகிச்சை முடிந்து இந்தியா திரும்பிய நடிகர் இர்ஃபான் கான் தனது ரசிகர்களின் அன்புக்கும் பிரார்த்தனைகளுக்கும் நன்றி தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார்.
ஆங்கிரேஸி மீடியம் படத்தின் டிரைலரை பிப்ரவரி மாதம் வெளியிட்ட நடிகர் இர்ஃபான் கான் கடைசியாக, படத்தின் ரிலீஸின் போது நான் உங்களோடு இருப்பேனோ மாட்டேனோ தெரியாது. ஆனால் ஆங்கிரேஸி மீடியம் எனக்கு மிகவும் ஸ்பெஷல். வாழ்க்கை நமக்கு எலுமிச்சை கனிகளை கொடுத்தால், எலுமிச்சை சாறு பிழிந்து குடிக்கலாம். ஆனால், எலுமிச்சை கனியை பிடுங்கிக் கொண்டால் மற்றொரு எலுமிச்சையை நாம் உருவாக்க முடியாது என தனது நோயின் தீவிரத்தை உணர்ந்து அப்போதே பதிவிட்டு இருந்தார்.
எல்லா போராட்டங்களுக்குப் பிறகு ஆங்கிரேஸி மீடியம் கடந்த மார்ச் 13ம் தேதி திரைக்கு வந்தது. கொரோனா பாதிப்பு காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டதால், ஆன்லைன் ஸ்ட்ரீமிங்கில் வெளியானது ஆங்கிரேஸி மீடியம்.
கடந்த சனிக்கிழமை தனது தாயின் இறுதிச்சடங்கை வீடியோ கால் மூலம் பார்த்து கதறி அழுத இர்ஃபான் கான், தாய் இறந்த சோகத்தில் தன்னுடைய உடல்நலத்தையும் கவனிக்க தவறி விட்டாரா? என தெரியவில்லை.
நேற்று, மீண்டும் கேன்சர் நோயின் தீவிரம் தலை காட்ட மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு ஐசியூவில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்ட போதும், இந்த முறை கேன்சரை வீழ்த்த இர்ஃபான் கானால் முடியவில்லை. எத்தனை வலிகளை தான் வாழ்வில் தாங்குவது என தனது போராட்ட குணத்தை விட்ட அந்த நாயகன், இன்று இயற்கை எய்தினார்.
சினிமா உலகம் ஒரு சிறந்த கலைஞனையும் நல்ல மனிதனையும் இழந்து தவிக்கிறது.


Click it and Unblock the Notifications