சிவசேனா விவகாரம் - ஷாருக் கானுக்கு அபிஷேக் பச்சன் ஆதரவு

சிவசேனாவுக்கும், ஷாருக் கானுக்கும் இடையே மோதல் வெடித்த பின்னர் பச்சன் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் ஷாருக் கானுக்கு ஆதரவு தெரிவித்திருப்பது இதுதான் முதல் முறையாகும்.
ஷாருக் கான் நடித்த மை நேம் இஸ் கான் படத்தை திரையிட விட மாட்டோம் என்று சிவசேனா மிரட்டி வருகிறது. ஷாருக் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கோரி வருகிறது.
இந்த நிலையில், தனது ட்வீட்டர் இணையதளத்தில் அபிஷேக் பச்சின் எழுதியுள்ளதாவது..
கடந்த சில நாட்களாக நடந்து வரும் அனைத்துமே துரதிர்ஷ்டவசமானது, சோகமானது. விளையாட்டு, கலை, கலாச்சாரம் ஆகியவை அரசியலுக்கு மேலாக இருக்க வேண்டும். அதில் அரசியல் கலப்பது சரியாக இருக்காது.
இதுபோன்ற நிகழ்ச்சிகளை நானும், எனது குடும்பத்தினரும் முன்பு சந்தித்துள்ளோம். அனைத்துக் குடிமக்களுக்கும் அமைதி, நல்லிணக்கம் நிலவ வேண்டிக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் அபிஷேக்.
ஷாருக் கானுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளதால், அபிஷேக் பச்சனுக்கு கண்டிப்பாக 'பால் (தாக்கரே) அபிஷேகம்' காத்திருக்கிறது என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











